விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து அரசே முடிவெடுக்கலாம் - சென்னை ஐகோர்ட்டு

விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2021-10-12 09:58 GMT
சென்னை,

கோவையை சேர்ந்தவர் ஆர்.பொன்னுசாமி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தொற்று படிப்படியாக குறைய தொடங்கியதும், ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.

ஆனால், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும், வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை வருகிறது. அன்று தமிழ்நாடு அரசு உத்தரவின்படி கோவில்களை திறக்காது. ஆகவே விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களை திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு அவசர வழக்காக சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து முதல்- அமைச்சர் நாளை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பார் என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்து வைத்தது.

மேலும் செய்திகள்