பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மன்னார்குடி நகரசபை தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-04 18:45 GMT

மன்னார்குடி:

வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மன்னார்குடி நகரசபை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆய்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இதனையொட்டி மன்னார்குடி நகரில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் மன்னார்குடி நகர சபை தலைவர் மன்னை சோழராஜன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், துணைத் தலைவர் கைலாசம், நகராட்சி பொறியாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி மேலாளர் மீரா மன்சூர் வரவேற்றார்.

கூட்டத்தில் நகர சபை தலைவர் மன்னை சோழராஜன் பேசியதாவது:- நகரத்தில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் பல ஆண்டு களுக்குப் பிறகு தூர்வாரப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் சீராக சென்று நீர்நிலையை அடைந்து மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்தட்டுப்பாடு

நகரத்தில் உள்ள அனைத்து கழிவு நீர் கால்வாய்களும் முழுமையாக தூர்வாரப்பட்டு கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய் தொற்று வராமல், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின் தட்டுப்பாடு ஏற்பட்டால் ஜெனரேட்டர் கொண்டு மக்களுக்கு குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பாக முகாமில் தங்க அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மரங்கள் முறிந்து விழுந்தால் உடனுக்குடன் அவற்றை அகற்றி சீரான போக்குவரத்து, மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் நகரமைப்பு அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்