சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்த 4 வீரர்கள் - ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவிப்பு

ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் எண்டெவர் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

Update: 2023-08-27 15:26 GMT

Image Courtesy : @Space_Station twitter

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் நாசாவுடன் இணைந்து சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. இவ்வாறு செல்லும் குழு 6 மாதங்கள் விண்வெளியில் தங்கும். கடைசியாக கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் எண்டெவர் விண்கலத்தில் குழு-6 அனுப்பப்பட்டது.

குழு-6ன் பயணக் காலம் முடிவடைய உள்ளதால் குழு-7ஐ விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன்-9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இதில் நாசா விண்வெளி வீரர் மற்றும் மிஷன் கமாண்டர் ஜாஸ்மின் மொக்பெலி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளி வீரர் மற்றும் பைலட் ஆண்ட்ரியாஸ் மொகென்சென், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விண்வெளி வீரர் சடோஷி புருகாவா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகியோர் பயணித்தனர்.

இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் எண்டெவர் விண்கலம் இந்திய நேரப்படி இன்று மாலை 6.46 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்தின் ஹார்மொனி மாட்யூல் உடன் இணைக்கப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து 4 விண்வெளி வீரர்களும் தற்போது சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றடைந்துள்ளனர்.


 

Tags:    

மேலும் செய்திகள்