விரைவில் எதிர்பார்க்கலாம்...!! வேற்று கிரகவாசிகள் 2 பேருடன் 3 மாதங்கள் பழகிய விமானியின் திகில் அனுபவம்

பறக்கும் தட்டில் வேற்று கிரகவாசிகளுடன் 3 மாதங்கள் வரை செலவிட்டேன் என அலெக்ஸ் கூறுகிறார்.

Update: 2024-02-06 10:28 GMT

நியூயார்க்,

பூமியில் நிலப்பரப்பு, நீர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்க கூடிய பல்வேறு உயிரினங்கள் உள்ளன. அவற்றில் மனித இனம் ஆளுமைமிக்க ஒன்றாக உள்ளது. பூமியின் ஆழத்தில் உள்ள விசயங்களை தேடி சென்ற மனிதன், விண்ணிற்கும் பயணம் மேற்கொண்டான். ஒரு சில நூற்றாண்டுகளில், அறிவியல் வளர்ச்சியால் இவற்றை மனிதர்கள் சாதித்து இருக்கின்றனர்.

இதுதவிர, பூமியின் துணை கோளான நிலவு, அருகேயுள்ள செவ்வாய் கிரகம் ஆகியவற்றிலும் மனிதர்களின் ஆய்வு நீண்டு வருகிறது. இந்த நிலையில், விண்ணில் பயணம் செய்யும்போது, வேறு சில சமிக்ஞைகளையும் விஞ்ஞானிகள் உணர்ந்து உள்ளனர். அவை, வேற்று கிரகவாசிகளின் வருகையாக இருக்க கூடும் என நம்பப்படுகிறது.

ஆனால், அவர்களின் உருவம், வடிவம் மற்றும் தொடர்பு கொள்ளும் முறை எப்படி இருக்கும்? என்பது எதுவும் தெரியாமல் உள்ளது. சில சமயங்களில் பறக்கும் தட்டுகள், ஆளில்லா விமானம் ஆகியவை பற்றிய தகவல்களும் வெளிவந்து ஆச்சரியமூட்டுகின்றன.

 

வேற்று கிரகவாசிகள் பற்றிய தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்காக பலரும் ஆய்வு பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விமானியாக பணியாற்றியவரின் அனுபவம் திகிலூட்டுகிறது.

அலெக்ஸ் கால்லியர் என்ற அந்த நபர் வேற்று கிரகவாசிகள் 2 பேருடன் 3 மாதங்கள் வரை நேரம் செலவிட்ட தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். அலெக்ஸ் கூறும்போது, அண்டத்தில் விரைவில் பழமையான வேற்று கிரகவாசியின் சேதங்களை மனிதர்கள் கண்டறிவார்கள் என்றும் கூறியுள்ளார்.

வேற்று கிரகவாசிகளுடனான உரையாடலுக்கு முன்னர், ஒரு சிறப்பு பெல்ட் ஒன்றை அணியும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். அதன்பின்னரே, அவர்களால் என்னுடன் தொடர்பு கொள்ள முடிந்தது என்றும் கூறுகிறார்.

 

இதன்படி, 1960-ம் ஆண்டில் அவர் 2 வேற்று கிரகவாசிகளுடன் பேசியிருக்கிறேன் என தெரிவித்து உள்ளார். அவர்களை ஆண்டிரோமீடியன்ஸ் என அழைக்கும் அலெக்ஸ், 2 பேரில் ஒருவரின் பெயர் விஸ்ஸேயஸ் என்றும் மற்றொருவரின் பெயர் மொரோவானே என்றும் கூறுகிறார். ஆண்டிரோமீடியன்ஸ் என்ற வேற்றுகிரகவாசி இனம் ஆனது, மனிதர்களின் முன்னோர்கள் என பறக்கும் தட்டு பற்றிய ஆர்வலர்கள் சிலர் கூறுகின்றனர்.

அந்த நிகழ்வுகளை அவர் நினைவுகூர்ந்து பேசும்போது, அது 1960-ம் ஆண்டு. அப்போது நான் சிறுவனாக இருந்தேன். நான் ஒளிந்து, பிடித்து விளையாடி கொண்டிருந்தேன். அப்போது, என்னுடைய தாத்தாவின் வீட்டுக்கு வெளியே நன்றாக தூங்கி விட்டேன். எழுந்து பார்த்தபோது, இருட்டறையில் இருந்தது தெரிந்தது.

அது ஒரு பறக்கும் தட்டு. அதில், விஸ்ஸேயஸ் மற்றும் மொரோவானே ஆகியோரை சந்தித்தேன். பறக்கும் தட்டில் 3 மாதங்கள் வரை அவர்களுடன் செலவிட்டேன் என அவர் கூறுகிறார். ஆனால், கால நீட்டிப்பு என்ற விஞ்ஞான அடிப்படையில், பூமி நேரப்படி அது 18 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

அவர்களுடன் பேசும்போது, அண்டத்தில் மனிதர்கள் தனியாக இல்லை என்றும் பல்வேறு வேற்றுகிரகவாசி இனங்கள் உள்ளன என்றும் அந்த வேற்றுகிரகவாசிகள் இருவரும் தன்னிடம் கூறினர் என அலெக்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

இதேபோன்று, 2007-ம் ஆண்டு ஜப்பானில் அலெக்ஸ் பேசும்போது, 10,000 கோடிக்கும் மேற்பட்ட கேலக்சிக்கள் (பால்வெளி மண்டலம்) உள்ளன என நம்முடைய அறிவியல் நமக்கு கூறுகிறது. ஆனால், நாம் ஒரே பரிமாணத்திலேயே பார்த்து கொண்டிருக்கிறோம் என்றார்.

ஆனால், ஆண்டிரோமீடியன்ஸ் கூற்றுப்படி, 100 லட்சம் கோடி கேலக்சிக்கள் உள்ளன. ஒவ்வொரு கேலக்சியிலும் வாழ்க்கை உள்ளது. அண்டம் மிக பெரியது. நாம் விண்வெளி பயணங்களை தொடங்கி சிறிது காலமே ஆகியுள்ளது. எல்லா இடங்களிலும் நாம் அழிவுகளை சந்திக்க போகிறோம் என்று பேசினார்.

ஒரு முறை நான் ஆண்டிரோமீடியன்ஸ்களிடம் பேசும்போது, நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறோம் என கேட்டேன். அதற்கு அவர்கள், அமெரிக்க ராணுவம் நாங்கள் நினைத்தவற்றை விட தொழில்நுட்ப ரீதியாக 400 ஆண்டுகள் அதிகம் முன்னேறியுள்ளது என தெரிவித்தனர்.

பூமியில் பணம் பயன்படுத்த கூடிய ஒரே இனம் மனிதர்களே என அலெக்சிடம் விஸ்ஸேயஸ் கூறியுள்ளது. அப்போது பணம் என்று, படங்கள் இடம் பெற்ற காகிதங்களையே விஸ்ஸேயஸ் கூறியிருக்க கூடும் என்று அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்