ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம் செல்லப் பிராணியாக வளர்த்த கங்காரு தாக்கியதில் முதியவர் பலி

த 77 வயதான முதியவர் ஒருவர் வனவிலங்கான கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார்

Update: 2022-09-13 23:23 GMT

சிட்னி, செப்.14-

ஆஸ்திரேலியாவில் மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தின் தலைநகர் பெர்த்தில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள ரெட்மாண்ட் நகரில் வசித்து வந்த 77 வயதான முதியவர் ஒருவர் வனவிலங்கான கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் நின்றுகொண்டிருந்த அந்த முதியவரை கங்காரு பயங்கரமாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் அந்த முதியவர் பலத்த காயம் அடைந்த நிலையில், இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆனால் ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்களை அந்த முதியவரை நெருக்கவிடாமல் கங்காரு பல இடையூறுகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த கங்காருவை சுட்டுக்கொன்றனர்.

அதன் பின்னர் மருத்துவ ஊழியர்கள் அந்த முதியவரை ஆம்புலன்சில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டனர். ஆனால் அதற்குள் அந்த முதியவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

செல்லப்பிராணியாக வளர்த்த முதியவரை கங்காரு தாக்கி கொன்ற சம்பவம் ஆஸ்திரேலியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் 5 கோடி கங்காருக்கள் இருந்தாலும் மனிதனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இதுபோன்ற தாக்குதல்கள் மிகவும் அரிதானவை.

அந்த வகையில் 1936க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கங்காரு தாக்கி மனிதன் உயிரிழந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்