ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 800... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 800 ஆக உயர்வு; ஆதரவு கரம் நீட்டிய இந்தியா
ஆப்கானிஸ்தானின் கிழக்கே நேற்று இரவு 11.47 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் நகங்கர் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.
இந்நிலநடுக்கம் தொடர்ச்சியாக, குனார் மாகாணத்தில் உள்ள 3 கிராமங்கள் முழுமையாக உருக்குலைந்து விட்டது என தலீபான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தருணத்தில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு கரம் நீட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவியை இந்தியா செய்யும் என்ற உறுதியை மத்திய வெளியுறவு துறை மந்திரி மந்திரி ஜெய்சங்கர் வழங்கினார்.
இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் பேரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஆழ்ந்த வருத்தத்திற்குரிய விஷயம். அந்நாட்டு மக்களுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவிக்கிறோம். இந்த தேவையான நேரத்தில் இந்தியா தன்னுடைய உதவியை வழங்கும்.
பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு எங்களுடைய இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறோம் என தெரிவித்து உள்ளார்.