ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. அதில் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல் செயலிகள் மூலம் நடைபெறும் சூதாட்டங்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும்.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட செயலி குறித்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி ஆன்லைன் பண விளையாட்டு சேவையை வழங்கும் நபருக்கு மற்றும் பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு அல்லது நிதியை அங்கீகரிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.