சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறையில் புதிய வசதி - யு.பி.எஸ்.சி.
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி. தகவல் தெரிவித்துள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 2025-ம் ஆண்டுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சமீபத்தில் வெளியிட்டது.
979 காலி இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 11-ந்தேதி வரை முதலில் அவகாசம் வழங்கப்பட்டு, பின்னர் அது 18-ந்தேதி வரை நீட்டித்து யு.பி.எஸ்.சி. அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்புவதற்கான சில உள்ளீடுகள் திருத்தக்கூடியதாக மாற்றப்பட்டு இருக்கிறது.
முன்னதாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான விண்ணப்ப பதிவில் தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொள்வதாக விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, 'ஆன்லைன்' விண்ணப்ப முறையில் யு.பி.எஸ்.சி., சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த முறை தேர்வில் மோசடிகளை தடுப்பதற்காக முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே, வயது மற்றும் இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பான சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என யு.பி.எஸ்.சி., தெரிவித்தது. அதற்கேற்ப ஆன்லைன் விண்ணப்பம் வடிவமைக்கப்பட்டது.
தற்போது செய்யப்பட்டுள்ள புதிய வசதியில், ஆன்லைன் விண்ணப்பத்தில் ஒரு முறை பதிவில் உள்ள பாலினம், சிறுபான்மையினர் அந்தஸ்து, 10ம் வகுப்பு தேர்வு பதிவு எண், எப்போதாவது பெயர் மாற்றம் செய்துள்ளீரா? ஆகியவற்றில் திருத்தம் செய்ய அனுமதித்து உள்ளது. மேலும் ஒரு முறை பதிவில் தந்த மொபைல் எண்ணை தவறவிட்டிருந்தால், மின்னஞ்சல் முகவரிக்கு ஓ.டி.பி., எனும் ஒருமுறை கடவுச்சொல் பெற்று மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ள வசதி செய்துள்ளனர். அதே போல் மின்னஞ்சலை மாற்ற விரும்பினால், மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி., பெற்று மாற்றிக்கொள்ளலாம்.
இதுதொடர்பான மேலும் விவரங்களை யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு வருகிற மே மாதம் 25-ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.