ரவுடியை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

மதுக்கடையில் ரவுடியை கத்தியால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-10 17:26 GMT

மூலக்குளம்

மதுக்கடையில் ரவுடியை கத்தியால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரவுடி

மூலக்குளம் அடுத்த கோபாலன் கடையை சேர்ந்தவர் கலைக்குமார் (வயது 23). ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கும், ஜி.என்.பாளையத்தை சேர்ந்த சரண்ராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சரண்ராஜ் மீதும் கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் உள்ளன.

இந்தநிலையில் நேற்று இரவு தக்ககுட்டையில் உள்ள ஒரு தனியார் மதுக்கடையில் கலைக்குமார் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சரண்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் அருள் மற்றும் 2 பேர் வந்து கலைக்குமாரிடம் தகராறு செய்தனர்.

2 பேர் கைது

இதனால் ஆத்திரம் அடைந்த சரண்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கலைக்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த கலைக்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தப்பியோடிய சரண்ராஜ், அருள் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்