மாமியாரை கூலிப்படையை ஏவி கொல்ல முயற்சி

புதுவையில் சொத்தை பிரித்து தராததால் மாமியாரை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்ட முயன்ற மருமகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-15 18:41 GMT

புதுச்சேரி

சொத்தை பிரித்து தராததால் மாமியாரை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்ட முயன்ற மருமகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டி கொலை முயற்சி

புதுச்சேரி புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை சாமி. அவரது மனைவி மேரி டெய்சி (வயது 72). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவரது கணவர், முதல் மகன் இறந்து விட்டனர். 2-வது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். எனவே வீட்டின் முதல் தளத்தை வாடகைக்கு கொடுத்து விட்டு 2-வது தளத்தில் மேரிடெய்சி தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி வீட்டில் வெட்டுக்காயங்களுடன் மேரிடெய்சி உயிருக்கு போராடினர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கூலிப்படையை ஏவி...

இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது குன்னூரில் வசித்து வரும் அவரது மருமகள் ரபெக்கா ரோஸ்லின் நிஷா (36) மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரை பிடித்து விசாரித்தபோது கூலிப்படை ஏவி தனது மாமியாரை கொல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கூலிப்படைகளாக செயல்பட்ட நெல்லை பெருமாள்புரத்தை சேர்ந்த ராஜேஷ் (27), சிம்சன் (19), முத்து (18) மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

கைதான ரபெக்கா ரோஸ்லின் நிஷா அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

நான் மெரி டெய்சியின் மூத்த மகன் அந்தோணி சேவியரை 2-வதாக திருமணம் செய்தேன். எனது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பின் நான் குன்னூர் சென்று விட்டேன். அங்கு உயர்தர நாய்கள் விற்பனை செய்து வருகிறேன். எனது மாமியார் வீடு, நிலங்களை வாங்கி விற்பது போன்ற தொழில்கள் செய்து வருகிறார். நான் எனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தரும்படி மாமியாரிடம் கேட்டேன். அவர் பிரித்து தரவில்லை. மேலும் நான் வேறொருவரை திருமணம் செய்ய முயற்சி செய்தேன். அதையும் அவர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

அதற்காக என்னிடம் வேலை செய்யும் நெல்லையை சேர்ந்த ராஜேஷ் (27) என்பவரிடம் உதவி கேட்டேன். ரூ.15 லட்சம் தருவதாக ஆசைவார்த்தை கூறினேன். எங்களது திட்டம் படி கடந்த 13-ந் தேதி ராஜேஷ் தலைமையில் 4 பேர் புதுவைக்கு வந்து மேரி டெய்சியை கொலை செய்ய முயற்சி செய்தனர். எனது மாமியாருக்கு பலரிடம் கொடுக்கல்-வாங்கல் தகராறு இருப்பதால் நான் கொலை செய்தாலும், என் மீது சந்தேகம் வராது என்று நினைத்தேன். இருப்பினும் போலீசார் துரிதமாக செயல்பட்டு என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சிறையில் அடைப்பு

பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரபெக்கா ரோஸ்லின் நிஷா உள்பட 4 பேர் காலாப்பட்டு சிறையிலும், சிறுவன் அரியாங்குப்பம் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். சொத்து தகராறில் மாமியாரை மருகளே தீர்த்துக்கட்ட முயன்ற சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்