'ஜெயிலர் படத்திற்கு காட்டும் ஆவலை, நமக்காக ஜெயிலுக்குப் போனவர்கள் பற்றி படிப்பதிலும் காட்ட வேண்டும்' - தமிழிசை சவுந்தரராஜன்

சுயசரிதைகளையும், தியாகங்களையும் படித்தால் நம் வாழ்க்கை சிறக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Update: 2023-08-15 08:18 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இதன் பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் கூறியதாவது;-

"ஜெயிலர் படம் பார்ப்பதற்கு காட்டும் ஆவலை, நம் சுதந்திரத்திற்காக ஜெயிலுக்குப் போனவர்கள் பற்றி படிப்பதிலும் காட்ட வேண்டும். சுயசரிதைகளையும், தியாகங்களையும் படிக்கப் படிக்க நமது வாழ்க்கை சிறக்கும். அதன் மூலம் நல்ல கருத்துகள் கிடைக்கும்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் மதன் லால் திங்ரா என்பவர், இங்கிலாந்திற்குச் சென்று கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொன்று, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். என் நாட்டு மக்களை கொன்றவர்களை, கொடுமைப்படுத்தியவர்களை அவர்கள் மண்ணிலேயே சென்று கொல்ல வேண்டும் என்று சென்ற இளைஞர்கள் எல்லாம் ஜெயிலுக்குப் போனார்கள். அவற்றை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று நாம் வேலை கிடைக்கவில்லை என்ற சூழலைப் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற சூழலை எல்லாம் பார்த்திருக்கிறார்கள். இன்று நாம் சந்திக்கும் சவால்கள் எல்லாம் சவால்களே அல்ல. நம் வாழ்க்கையை எப்படியெல்லாம் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்."  இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்