கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுவையில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.;

Update:2022-07-03 21:46 IST

புதுச்சேரி

புதுவையில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

தாவரவியல் பூங்கா

புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். நேற்றும் விடுமுறை தினம் என்பதால் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன.

சுற்றுலா பயணிகள் வருகையால் புதுவை பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

போக்குவரத்து நெரிசல்

புதுச்சேரி பழைய துறைமுகம் மற்றும் தலைமை செயலகம் அருகே உருவாகியுள்ள செயற்கை மணல் பரப்பிலும் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர்.

புதுச்சேரி நகர பகுதியில் ஏராளமான வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. நகரின் முக்கிய வீதிகளான அண்ணா சாலை, நேருவீதி, புஸ்சி வீதி, கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எச்சரிக்கை

புதுவையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் எச்சரிக்கையை மீறி புதுவை கடற்கரை சாலை, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தனர். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் முககவசம் அணியாதவர்களை எச்சரித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடைபெறும் சண்டே மார்க்கெட்டிலும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது. மாலையில் அது மேலும் அதிகரித்தது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலமாக போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்