போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து: 15 பேர் பலி
கேபிள் கார் செல்லும் கம்பி (cable) வலுவிழந்து போனதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக லிஸ்பனின் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.;
லிஸ்பன்,
ஐரோப்பிய நாடான போர்ச்சுகல்லின் தலைநகர் லிஸ்பனில் குளோரியா புனிகுலர் கேபிள் கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. குளோரியா புனிகுலர் கேபிள் கார், நகரத்தின் வரலாற்று சின்னமாகும். சுற்றுலா பயணிகள் மத்தியில் இது மிகவும் பிரபலமானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 5 பேர் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மேடான தண்டவாளப் பகுதியில் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கேபிள் கார் கட்டடம் ஒன்றின்மீது மோதியததாகச் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த கேபிள் காரில் சுமார் 40 பேர் பயணம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
கேபிள் கார் செலுத்தும் கம்பி (cable) வலுவிழந்து போனதால் விபத்து நிகழ்ந்ததாக லிஸ்பன் தீயணைப்பாளர்கள் கூறியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் காரில் இருந்தவர்கள், அருகிலிருந்த பாதசாரிகள் ஆகியோர் அடங்குவர் என்றும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டது.1885ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சம்பந்தப்பட்ட ‘ஃபனிக்கியூலர்’ கேபிள் கார், லிஸ்பனின் மத்தியப் பகுதியையும் பைரோ அல்டோ (Bairro Alto) பகுதியையும் இணைக்கிறது. பழுதுபார்ப்புப் பணிகள் தொடர்பான எல்லா விதிமுறைகளையும் தாங்கள் பின்பற்றிச் செயல்பட்டதாக லிஸ்பன் பொதுப் போக்குவரத்து நிறுவனமான கேரிஸ் தெரிவித்துள்ளது.இந்த சம்பவத்தை தொடர்ந்து போர்ச்சுகல் அரசு தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.