மோட்டார் சைக்கிள் திருடிய 4 வாலிபர்கள் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 4 வாலிபர்கள் கைது
x

புதுச்சேரி நகரில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேரிடம் இருந்து 6 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி

புதுச்சேரி நகரில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேரிடம் இருந்து 6 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கையும் களவுமாக சிக்கினர்

புதுவை வாணரப்பேட்டை தமிழ்த்தாய் நகரை சேர்ந்தவர் வேதநாயகம் (வயது 40). பெயிண்டர். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளை பழைய கோர்ட்டு வளாகம் அருகே நிறுத்திவிட்டு கடற்கரைக்கு சென்று நடைபயிற்சி மேற்கொண்டார்.

பின்னர் திரும்பி வந்தபோது அவரது மோட்டார் சைக்கிளை 3 பேர் தள்ளிக்கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த வேதநாயகம் திருடன், திருடன் என்று கத்தினார். உடனே அந்த நபர்களை கடற்கரைக்கு வந்தவர்கள் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் கையும் களவுமாக சிக்கிய அவர்களை ஒதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தனர்.

4 பேர் கைது

போலீசாரின் விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரத்தை சேர்ந்த முத்து (வயது 19), சத்தியபாலன் (20), திருக்கோவிலூரை சேர்ந்த சதீஷ்குமார் (21) என்பது தெரியவந்தது. அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கண்டாச்சிபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story