ரவுடி கொலையில் 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது


ரவுடி கொலையில் 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
x

அரியாங்குப்பத்தில் நடந்த ரவுடி கொலையில் 2 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பத்தில் நடந்த ரவுடி கொலையில் 2 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரவுடி கொலை

அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் மாஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது19). ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 6-ந் தேதி இரவு ஆர்.கே. நகரில் உள்ள தனியார் மதுபான கடைக்கு சென்ற பிரவீனை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது.

இது தொடர்பாக பிரவீனின் தாய் விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டது.

7 பேர் கைது

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், பிரவீனுக்கும் அரியாங்குப்பம் பாரதிநகரை சேர்ந்த ஆகாஷ் (22) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும், அதனால் பிரவீனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆகாஷ் கொலை செய்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் தேங்காய்த்திட்டு சுடுகாடு பகுதியில் பதுங்கி இருந்த ஆகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மணவெளி கவி என்கிற கவியரசன் (22), அரியாங்குப்பம் பி.சி.பி. நகர் மனோ என்கிற ரதீஷ் மனோ (20), தட்டாஞ்சாவடி ஜான் பேட்ரிக் (19), கோவிந்தசாலை ராஜீவ் காந்தி நகர் கார்த்திகேயன் (19) மற்றும் 2 சிறுவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய 5 பட்டா கத்திகள், ஒரு மோட்டார் சைக்கிள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ஆகாஷ், கவியரசன் உள்பட 5 பேர் புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவர்கள் 2 பேரும் அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story