ரஜினியின் 2.0 பட டீசர் வெளியீடு சவுந்தர்யா ரஜினிகாந்த் கண்டனம்


ரஜினியின் 2.0 பட டீசர் வெளியீடு சவுந்தர்யா ரஜினிகாந்த் கண்டனம்
x
தினத்தந்தி 4 March 2018 11:56 AM GMT (Updated: 4 March 2018 2:14 PM GMT)

ரஜினியின் 2.0 பட டீசர் முன்பே வெளியானதற்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். #soundaryarajnikanth

ரஜினியின் 2.0 பட டீசர் அதிகார பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் வெளியானதற்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 நடிகர் ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.0.’ ரூ.450 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளது. 2010–ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் 1.27 நிமிட டீசர் இணைய தளங்களில் வெளியானது.

 முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட காலா திரைப்படத்தின் டீசரும் இதே போல, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக இணையத்தில் வெளியானது. இப்படி தொடர்ந்து படங்களின் டீசர் மற்றும் டிரைலர்கள் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக இணையதளத்தில் வெளியாவது திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்நிலையில், 2.0 பட டீசர் வெளியானதற்கு தயாரிப்பாளரும் ரஜினியின் மகளுமான சவுந்தர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அது குறித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,

’அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னரே ஆன்லைனில் படகாட்சிகள் வெளியிடப்படுவதை ஏற்றுக் கொள்ளவோ , அனுமதிக்கவோ முடியாது. கடின உழைப்பு, முயற்சிகள் தயாரிப்பாளர்களின் உணர்வுகளை புறந்தள்ளி விட்டு சில நொடி மகிழ்ச்சிக்காக படகாட்சிகளை ஆன்லைனில் வெளியிடுவது மனசாட்சி இல்லாத செயல்’ என தெரிவித்துள்ளார்.

Next Story