லிப்டில் ராதிகா ஆப்தேவுக்கு தொல்லை கொடுத்த நடிகர்


லிப்டில் ராதிகா ஆப்தேவுக்கு தொல்லை கொடுத்த நடிகர்
x
தினத்தந்தி 16 Sep 2018 11:00 PM GMT (Updated: 16 Sep 2018 9:18 PM GMT)

லிப்டில் தனக்கு தொல்லை கொடுத்ததாக, நடிகர் மீது ராதிகா ஆப்தே புகார் தெரிவித்துள்ளார்.


தமிழில் ரஜினி ஜோடியாக கபாலி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடிகர் ஒருவர் மீது சமீபத்தில் பாலியல் புகார் கூறி இருந்தார். அவர் அளித்த பேட்டியில் தென்னிந்திய மொழி படமொன்றில் நடித்தேன். அந்த படத்தின் கதாநாயகனை அதற்கு முன்பு நேரில் கூட நான் பார்த்தது இல்லை. படப்பிடிப்பில் முதல் நாளே அந்த நடிகர் என்னிடம் சில்மிஷங்கள் செய்தார். எனது பாதங்களை வருடினார். இதனால் கோபத்தில் அவரை அறைந்து விட்டேன். செருப்பையும் காட்டினேன்” என்று கூறினார்.

இப்போது புதிதாக இன்னொரு நடிகர் மீது ராதிகா ஆப்தே புகார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“எனக்கு சமீபத்தில் நடந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தபோது எனது முதுகில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் தங்கி இருந்த ஓட்டலுக்கு திரும்பினேன். எனது அறைக்கு செல்வதற்காக ஓட்டல் லிப்டில் ஏறினேன்.

அதே லிப்டில் என்னுடன் நடித்த நடிகரும் வந்தார். நாங்கள் இருவர் மட்டுமே லிப்டில் இருந்தோம். சேர்ந்து நடித்தாலும் அவரோடு நான் பேசியது இல்லை. அந்த நடிகர் லிப்டுக்குள் திடீரென்று என்னிடம் அத்துமீறி பேசினார். உங்களுக்கு நள்ளிரவில் ஏதேனும் உதவி தேவை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் வந்து உங்கள் முதுகை தடவி விடுகிறேன் என்றார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த நடிகரை பற்றி தயாரிப்பாளரிடம் புகார் செய்தேன். பிறகு அந்த நடிகர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

Next Story