கஜா புயல் பாதிப்பு; நடிகர் அஜித் குமார் ரூ.15 லட்சம் நிதியுதவி


கஜா புயல் பாதிப்பு; நடிகர் அஜித் குமார் ரூ.15 லட்சம் நிதியுதவி
x
தினத்தந்தி 24 Nov 2018 2:53 PM GMT (Updated: 24 Nov 2018 2:53 PM GMT)

கஜா புயல் பாதிப்பினை தொடர்ந்து முதல் அமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் குமார் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

சென்னை,

கஜா புயல் கடந்த 16ந்தேதியன்று நாகப்பட்டினம் அருகே கரையை கடந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்பட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் வீடு, உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசி, நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதை தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்துக்கு குழு ஒன்றை அனுப்பி அறிக்கை கேட்க முடிவு செய்தது.

அதன்படி மத்திய குழுவினர் நேற்றிரவு விமானத்தில் சென்னை வந்தனர்.  அவர்கள் இன்று மாலை 4.30 மணிக்கு புதுக்கோட்டையில் முதல் கட்ட ஆய்வை தொடங்கினர்.  தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தஞ்சையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

3 நாட்கள் ஆய்வு செய்யும் மத்திய குழுவினர் வருகிற 27ஆம் தேதி மீண்டும்  சென்னை வந்து, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள்.

‘கஜா’ புயலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் படகுகள், மரங்கள், பயிர்கள், குடிநீர் மற்றும் மின்சார கட்டமைப்புகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இவற்றை சரிசெய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் சுகாதாரத்தை பேணுவதற்காக சிறப்பு மருத்துவ குழுக்கள் முகாமிட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றன.

புயல் பாதிப்பினை அடுத்து நிவாரண பணிகளுக்காக, முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை பொதுமக்கள் வழங்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.  அதன்படி பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் நிவாரண நிதியை வழங்கலாம்.

கஜா புயல் பாதிப்பினை அடுத்து, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவி பொருட்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். நடிகர் விஜய்யும் ரசிகர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் வழங்கி உள்ளனர்.

நடிகர்கள் விஜய் சேதுபதி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் வழங்கி உள்ளனர். நடிகர் விக்ரமும் ரூ.25 லட்சத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்.

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பினை தொடர்ந்து முதல் அமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் குமார் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

Next Story