சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி


சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 12 May 2019 11:47 PM GMT (Updated: 12 May 2019 11:47 PM GMT)

சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் கடந்தது குறித்து நடிகர் தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


தனுஷ் நடிகராகி 17 வருடங்கள் ஆகிறது. 2002-ல் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

தேவதையை கண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், ஆடுகளம், 3, மரியான், வேலையில்லா பட்டதாரி, கொடி, வட சென்னை என்று பல படங்கள் தனுசின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தின. ஆடுகளம் படத்தில் தேசிய விருது பெற்றார். ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய இந்தி படங்களிலும் நடித்தார்.

தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலை வெறி பாடல் உலக அளவில் ரசிகர்களை ஈர்த்தது. வுண்டர்பார் பட நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறினார். இத்தனை வருடங்கள் சினிமாவில் நீடிக்கும் தனுசை திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்தினர்.

இதற்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“என் அன்பான ரசிகர்களே, துள்ளுவதோ இளமை படம் 2002 மே 10-ல் வெளியானது. என் வாழ்க்கையையே அந்த நாள் மாற்றிவிட்டது. அதற்குள் 17 வருடங்கள் ஆகிவிட்டது. இதையொட்டி ரசிகர்கள் வீடியோ வெளியிட்டும் சுவரொட்டிகள் ஒட்டியும் என்னை வாழ்த்தி உள்ளனர்.

அன்பு மட்டுமே உலகை உருவாக்குகிறது. நடிகராக தாக்குப்பிடிக்க முடியுமா என்ற நிலையில் இருந்த எனக்கு மனதில் இடம் அளித்து எனது வெற்றி தோல்வியில் அருகிலேயே இருந்த உங்களுக்கு எனது மனதின் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.


Next Story