பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை உறுதி செய்த கார்த்தி


பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை உறுதி செய்த கார்த்தி
x
தினத்தந்தி 3 Sep 2021 4:03 AM GMT (Updated: 3 Sep 2021 4:03 AM GMT)

இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம், ‘பொன்னியின் செல்வன்.’ மணிரத்னம் டைரக்டு செய்கிறார். பிரபு, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், திரிஷா உள்பட திரையுலகின் பல பிரபலங்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்கள்.

பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கதாநாயகர்களில் ஒருவரான ஜெயம் ரவி படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். இதை அவர் தனது டுவிட்டர் பக்கம் மூலம் தெரிவித்தார்.

படப்பிடிப்பின்போது தன்னை மணிரத்னம் பிரத்யேகமாக கவனித்துக் கொண்டார் என்றும், தனிப்பட்ட முறையில் அக்கறையுடன் பார்த்துக் கொண்டார் என்றும் ஜெயம் ரவி டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார். அடுத்து மணிரத்னத்துடன் எப்போது பணிபுரியும் வாய்ப்பு வரும்? என்று எதிர்பார்க்க வைத்து விட்டார் என்றும் கூறியிருக்கிறார்.

இதற்கு கார்த்தி தனது டுவிட்டரில், ‘‘இளவரசே அத்தனை எளிதில் நீங்கள் விடை பெற்றுக்கொள்ள முடியாது. இன்னும் 6 நாட்களில் என் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பும் முடிந்துவிடும். தென்மண்டலம் வந்ததும் சந்திப்போம்...வந்தியதேவன்’’என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் தனது கதாபாத்திரம் வந்திய தேவன் என்பதை உறுதி செய்து இருக்கிறார்.


Next Story