அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் - நடிகர் விஜய்


தினத்தந்தி 17 Jun 2023 3:04 AM GMT (Updated: 17 Jun 2023 11:54 AM GMT)

தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ,மாணவியருக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.

சென்னை,


Live Updates

  • அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் - நடிகர் விஜய்
    17 Jun 2023 6:36 AM GMT

    அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் - நடிகர் விஜய்

    என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம்.

    நான் நிறைய இதுபோன்ற ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை. மனதிற்கு எதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப்போல் உணர்கிறேன்.

    வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அனைவரையும் பார்க்கும்போது எனது பள்ளிகால நினைவுகள் தான் வருகிறது.

    நான் உங்களை போல சிறந்த மாணவன் எல்லாம் கிடையாது. நான் சராசரியான மாணவன் தான். நான் ஒரு நடிகன் ஆகவில்லை என்றால் டாக்டராகியிருப்பேன்... அது ஆகியிருப்பேன் இது ஆகியிருப்பேன் என்று கூற விரும்பவில்லை. என் கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான் அதை நோக்கியே என் பயணம் சென்றுகொண்டிருந்தது.

    ‘ஒருவேளை சரி அதை விடுங்கள் அது இப்போது எதற்கு....’ இது போன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் அழகிய வசனம் ஒன்றை கேட்டேன். காடு இருந்தால் எடுத்துக்கொள்வார்கள்... ரூபாய் இருந்தால் பிடுங்கிக்கொள்வார்கள் ஆனால் படிப்பை மட்டும் உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளவே முடியாது என்று அது என்னை மிகவும் பாதித்த வார்த்தைகளாக இருந்தது. இது நூற்றுக்கு நூறு உண்மை மட்டுமல்ல இது தான் எதார்த்தமும் கூட....

    அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு என் சார்பில் ஏதேனும் செய்யவேண்டும் என்று என் மனதில் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருந்தது. அதற்கான நேரம் தான் இது.

    நாம் படிக்க வேண்டும். தேர்வு, மதிப்பெண் அனைத்தும் முக்கியம் தான் அதையும் தான் உங்கள் குணநலனுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள் அது மிகவும் முக்கியம். அதேவேளை உங்கள் சுய அடையாளத்தை எக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள். நம் வாழ்க்கை நம் கையில் தான் என்பதை நம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

    இந்த காலம் தகவல்கள் கொண்ட காலம்... வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இன்னும் பல... இதில் பெரும்பாலும் போலி செய்திகள் உள்ளன.

    சமூகவலைதளத்தில் செய்தி பதிவிடும் ஒருசிலருக்கு ஒரு மறைமுக நோக்கம் இருக்கும். ஒரு கவர்ச்சிகரமான தகவல்கள் மூலமாக நாம் அந்த கவனத்தை பெற்றுக்கொள்ளலாம் என சிலது நடக்கும். எதை எடுத்துக்கொள்ளலாம் எதை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை நீங்கள் தான் ஆராய வேண்டும். எது உண்மை எது பொய்? எதை நம்பலாம் எதை நம்பக்கூடாது. இதற்கு உங்கள் பாடப்புத்தகங்களை தாண்டி நீங்கள் படிக்க வேண்டும்.

    முடிந்தவரை படியுங்கள் எல்லோரையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எல்லா தலைவர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்.

    நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். ஆனால், நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துவது பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? அது தான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது தான் நாமும் இப்போது செய்துகொண்டிருக்கிறோம். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது... உதாரணமாக கூறுகிறேன் ஒரு வாக்கிற்கு 1000 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள் ஒரு தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் 15 கோடி ரூபாய் ஆகிறது. ஒருவர் 15 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என்றால் அவர் அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். யோசித்து பாருங்கள்

    தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் அவர்கள் பெற்றோரிடம் சென்று அப்பா, அம்மா இனிமேல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று கூறிப்பாருங்கள். முயற்சி செய்து பாருங்கள்... நீங்கள் கூறினால் நடக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள்’ என்றார்.

  • 17 Jun 2023 5:59 AM GMT

    பொறுப்புணர்ச்சி வந்ததைப்போல் உணர்கிறேன் - நடிகர் விஜய்

    என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம்.

    நான் நிறைய இதுபோன்ற ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை. மனதிற்கு எதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப்போல் உணர்கிறேன்.

  • 17 Jun 2023 5:39 AM GMT

    தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சி

    அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. சென்னை நீலாங்கரையில் நடைபெறு வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. 

  • 17 Jun 2023 5:30 AM GMT

    நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு விஜய் வருகை

    நிகழ்ச்சி நடைபெறும் நீலாங்கரையில் உள்ள அரங்கத்திற்கு நடிகர் விஜய் வந்தடைந்தார்

  • 17 Jun 2023 5:24 AM GMT

    பனையூரில் உள்ள வீட்டில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு நடிகர் விஜய் காரில் புறப்பட்டார்.

  • 17 Jun 2023 3:05 AM GMT

    தமிழ்நாடு சினிமா துறையில் முக்கிய நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இவர் நடித்து வரும் லியோ திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

    இதனிடையே, நடிகர் விஜய் அவ்வப்போது அரசியல் ரீதியிலான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். அதேபோல், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த இயக்கம் மூலம் சமீப காலமாக பல்வேறு செயல்பாடுகள் அரங்கேறி வருகிறது. மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த சூழ்நிலையில், அரசியல் களத்தில் குதிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகளையும் நடிகர் விஜய் எடுத்து வருகிறார். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார்.

    சென்னை நீலாங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார்.


Next Story