மோடி தெய்வ மகன் கிடையாது... டெஸ்ட் டியூப் பேபி - பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்


மோடி தெய்வ மகன் கிடையாது... டெஸ்ட் டியூப் பேபி - பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்
x

ஒரு கலைஞன் கோழையானால் ஒரு சமுதாயமே கோழையாகிவிடும் என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய பிரகாஷ்ராஜ் கூறியதாவது:-

திருமாவளவன் போல என்னுடையது நீண்டகால கொள்கைப் போராட்டம் அல்ல. பலரும் என்னிடம் ஏன் பேசுகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். உடலுக்கு ஒரு காயம் ஏற்பட்டால், நாம் சும்மா இருந்தால் கூட அந்த வலி தானாகவே குறைந்துவிடும். ஆனால் ஒரு சமுதாயத்துக்கு, ஒரு நாட்டுக்கு காயம் ஏற்பட்டால், நாம் பேசாமல் இருந்தால் அது அதிகம் ஆகிவிடும். ஒரு கலைஞன் கோழையானால் ஒரு சமுதாயமே கோழையாகிவிடும்.

நான் செய்துகொண்டிருப்பது என்னுடைய கடமை. இந்த புரிதல் என்னுடைய திறமையால் எனக்கு வந்தது அல்ல. லங்கேஷ், அம்பேத்கர், காந்தி, பாரதி, மார்க்ஸ் போன்றோரை படித்ததால் வந்தது. கடந்த 10 ஆண்டுகளாகத்தான் மன்னரை (மோடியை) நான் எதிர்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் அவரை மன்னர் என்று சொல்லமுடியாது. மன்னிக்க வேண்டும். அவர்தான் தெய்வக் குழந்தையாகி விட்டாரே. அவரால் நாட்டுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், இனி அவரை திட்டமுடியாது. தெய்வம் சோதிக்கிறது என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.

மறைந்த கவுரி லங்கேஷ் உடைய தந்தை லங்கேஷ் தான் என்னுடைய ஆசான். அவர்தான் எங்களை செதுக்கியவர். அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதாமல் இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. அவருடைய சிந்தனைகள் பசியால், வறுமையால் பிறந்தல்ல. அவமானத்தில் பிறந்தது. மோடியை கொஞ்சம் பாருங்கள்; ஒரு பாசிஸ்ட். ஒரு சர்வாதிகாரி. அவர் தேரில் தான் நிற்பார். விமானத்தில் தான் வருவார்; மக்கள் பூ போடுவார்கள். அவர் மக்கள் பக்கத்தில் நிற்க மாட்டார். மக்கள் வேலிக்கு அந்த பக்கம் நிற்பார்கள்.

மக்களின் ஸ்பரிசம் தெரியாதவர், மக்களின் வியர்வையை தொடாதவர், மக்களின் பசியை அறியாதவருக்கு மக்களை பற்றி எப்படி புரியும்? மோடி தெய்வ மகன் கிடையாது. டெஸ்ட் டியூப் பேபி. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story