கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் திருடி பிழைக்கின்றனர்: கழுகு-2 - விமர்சனம்


கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் திருடி பிழைக்கின்றனர்: கழுகு-2 - விமர்சனம்
x
தினத்தந்தி 3 Aug 2019 3:54 PM GMT (Updated: 3 Aug 2019 3:54 PM GMT)

கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் திருடி பிழைக்கின்றனர். அவர்களை போலீசார் பிடித்து பொய் வழக்கில் ஜெயிலுக்குள் தள்ள திட்டமிடுகின்றனர். கழுகு-2 படத்தின் சினிமா விமர்சனம்.

இதனால் போலீஸ் துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு இருவரும் தப்பி ஓடுகிறார்கள். இன்னொரு புறம் கொடைக்கானலில் செந்நாய்கள் ஆபத்து இருக்கும் எஸ்டேட்டில் மரம் வெட்டும் காண்டிராக்டை எடுத்தவர் அவற்றை விரட்ட துப்பாக்கி வைத்திருக்கும் ஆட்களை அழைத்து வரும்படி உதவியாளர் எம்.எஸ்.பாஸ்கரை அனுப்பி வைக்கிறார்.

அவர் கண்ணில் துப்பாக்கியுடன் திரியும் கிருஷ்ணாவும், காளிவெங்கட்டும் பட நிஜமாகவே வேட்டைக்காரர்கள் என்று கருதி சம்பளம் தருவதாக பேசி அழைத்து வந்து விடுகிறார். காட்டில் மரம் வெட்டுபவர்களுக்கு காவலாக இருவரும் நிறுத்தப்படுகிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் மகள் பிந்து மாதவியை செந்நாய் தாக்க வருகிறது. அப்போது சுட தெரியாமல் தடுமாறுகிறார் கிருஷ்ணா.

ஆனாலும் துப்பாக்கியால் அடித்து செந்நாயை கொல்கிறார். இதனால் கிருஷ்ணா மீது பிந்து மாதவிக்கு காதல் வருகிறது. இருவரும் தனிமையில் காதலை வளர்க்கின்றனர். அதன்பிறகு எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளையடித்து விட்டு பிந்து மாதவியுடன் ஊரை விட்டு ஓடிவிட கிருஷ்ணா திட்டமிடுகிறார். அது நடந்ததா? என்பது கிளைமாக்ஸ்.

கிருஷ்ணாவுக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள படம். அதை சரியாக பயன்படுத்தி உள்ளார். சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் வறுமை நிலையை பிந்து மாதவியிடம் சொல்லும்போது உருக வைக்கிறார். ஜெயிலுக்கு சென்றால் பிந்து மாதவியின் வாழ்க்கை போய்விடும் என்று அவரது காதலை ஏற்க மறுப்பது, விஷ முள் குத்தி சிகிச்சை பெறும் பிந்து மாதவியை அருகில் இருந்தே கவனித்துக்கொள்வது என்று கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார்.

பிந்து மாதவி நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. காதல் உணர்வுகளை உயிரோட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் யதார்த்த நடிப்பால் கவர்கிறார். அவரது இன்னொரு முகம் அதிர வைக்கிறது. காளிவெங்கட் சிரிக்க வைக்கிறார். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பெரும்பகுதி கதை காட்டுக்குள்ளேயே முடங்குகிறது.

முதுமக்கள் தாழியில் நகைகள், எம்.எல்.ஏ.வுடன் மோதல் என்று பிற்பகுதி கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் சத்ய சிவா. கிளைமாக்சில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களுடன் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். ராஜா பட்டாச்சாரி கேமரா காட்டுக்குள் சுழன்று அதன் அழகை கண்களில் பதிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை பலம் சேர்த்துள்ளது.

Next Story