விதிகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி: தலைமை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்


விதிகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி: தலைமை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 7 July 2017 10:00 PM GMT (Updated: 7 July 2017 6:02 PM GMT)

விதிகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி: அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி வழக்கு தலைமை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

மதுரை,

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கடந்த ஜூன் 30–ந்தேதி மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மற்றும் திண்டுக்கல்லில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைத்தால் சம்பந்தப்பட்டவருக்கு ஓராண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் இந்த வி‌ஷயத்தை போலீசார் கண்டும், காணாமலும் விட்டுள்ளனர்.

எனவே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்களை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மதுரை, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமி‌ஷனர், சூப்பிரண்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பியும் உரிய பலன் இல்லை. எனவே எனது மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனு சம்பந்தமாக தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 24–ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story