நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்தவர் கைது


நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2018 3:01 AM GMT (Updated: 8 Feb 2018 3:01 AM GMT)

காரிமங்கலத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் கடமடை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). இவர் கடந்த நவம்பர் மாதம் காரிமங்கலம் சந்தைபேட்டையில் உள்ள ஒரு அடுக்கு மாடியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தார். அதில் கிராம பெண்கள் வளர்ச்சி நிதி நிறுவனம் என்ற பெயரில் ஒரு அலுவலகத்தை ஆரம்பித்தார்.

அதைத்தொடர்ந்து தனது நிறுவனத்தில் முகவர்களாக பணிபுரிய இளைஞர்கள் தேவை என்று அறிவித்தார். அதை நம்பிய கம்பைநல்லூர் அருகே உள்ள ஜே.பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த மனோ (25), அவரது நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன், அரசு, முகிலரசு, நவீன்குமார் மற்றும் வேடியப்பன் ஆகிய 6 பேரும் சக்திவேலை சந்தித்து உள்ளனர்.

அவர்களிடம் சக்திவேல் மிக சாதுர்யமாக பேசி அவர்களை தன் வசத்தில் கொண்டு வந்துள்ளார். அவர்களும் ஒரு நல்ல கணிசமான தொகை தங்களுக்கு சம்பளமாக வருவதை எண்ணி வேலைக்கு சேர்ந்தனர்.

அப்போது சக்திவேல் அவர்களிடம் கிராமங்களுக்கு சென்று வட்டியில்லா கடன் ரூ.25 ஆயிரம் நமது நிறுவனம் கொடுப்பதாகவும், அதை 18 மாதங்களில் ரூ.1,670 வீதம் திருப்பி செலுத்த வேண்டும் என்றும், அதற்கு பயனாளிகள் ஒவ்வொருவரும் ரூ.878-ஐ நிறுவனத்துக்கு வைப்புத்தொகையாக முன்னதாகவே கட்டவேண்டும் என தெரிவிக்க வேண்டும் என்றும் சக்திவேல் கூறியுள்ளார்.

மேலும் முகவர்களிடம் உங்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றும், அதற்கு நிறுவனத்துக்கு காப்புத்தொகையாக ரூ.3 ஆயிரம் வீதம் நீங்கள் கட்டவேண்டும் என்றும் கூறியதை நம்பி மனோ உள்ளிட்ட 6 பேரும் ரூ.18 ஆயிரத்தை சக்திவேலிடம் கொடுத்துள்ளனர்.

பின்னர் அவர் தயாரித்்து கொடுத்த போலி அடையாள அட்டையுடன் பொதுமக்களிடம் சென்று இந்த நிறுவனம் குறித்து தெரிவித்தனர். இதனால் நிறுவனத்தின் மீது நம்பிக்கை ஏற்படவே பொதுமக்கள் 512 பேரிடம் ரூ.878 வீதம் மொத்தமாக முகவர்கள் 6 பேரும் ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 536-ஐ வசூல் செய்து சக்திவேலிடம் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில் சந்தைபேட்டையில் இயங்கி வந்த நிதி நிறுவனத்தை சக்திவேல் கடந்த டிசம்பர் 2-ந் தேதி இரவு காலி செய்துவிட்டு பணத்துடன் தலைமறைவானார். இதனால் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் முகவர்கள் 6 பேரையும் பணத்தை திரும்ப பெற்றுத்தரும்படி கேட்டு தொந்தரவு செய்தததை அடுத்து மனோ, தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க காரிமங்கலம் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்்றும் போலீசார் விசாரணை நடத்தி, பாலக்கோட்டில் பதுங்கியிருந்த நிதி நிறுவனம் நடத்திய சக்்திவேலை கைது செய்தனர். அவர் மீது நம்பிக்கை மோசடி, பொய்யான ஆவணம் தயாரித்தல், ஏமாற்றும் பொருட்டு ஆவணம் தயாரித்தல், போலி ஆவணத்தை உண்மை என்று நம்ப வைக்க முயற்சி மற்றும் ஆதாயம் அடைய நம்ப வைத்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story