எச்.ராஜாவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எச்.ராஜாவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 11:00 PM GMT (Updated: 8 March 2018 9:37 PM GMT)

நாகையில் எச்.ராஜாவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், திரிபுராவில் லெனின் சிலையை இடித்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா கட்சி ஆகியவற்றை கண்டித்தும், தமிழகத்தில் உள்ள பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என்று கூறிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாகை நகர செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர துணை செயலாளர் குணசேகரன், ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் ராஜராஜசோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலன், மாவட்டக்குழு உறுப்பினர் சுபாஷ்சந்திரபோஸ், நகரக்குழு உறுப்பினர் சிவக்குமார், மணி ஆகியோர் பேசினர்.

இதில் திரிபுராவில் பா.ஜனதா வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள பிலோமினியா என்ற இடத்தில் இருந்த லெனின் சிலை இடிக்கப்பட்டதை கண்டித்தும், அதேபோல் தமிழ்நாட்டிலும் பெரியாரின் சிலை அகற்றப்படும் என பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கட்சி மாவட்ட செயலாளர் புபேஸ்குப்தா, நகர செயலாளர் செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன், நகர செயலாளர் மணி, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் தாஜுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தலைஞாயிறு பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திரிபுரா மாநிலத்தில் வன்முறையில் ஈடுபடும் பா.ஜனதா கட்சியினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வேணு தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மகேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முருகையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அலெக்சாண்டர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பேரூர் செயலாளர் சோமு.இளங்கோ, விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா கட்சியினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜகுரு, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் செல்வி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story