சொத்து தகராறில் தாயை வெட்டிக்கொன்ற மகன் துண்டித்த தலையுடன் போலீசில் சரண்


சொத்து தகராறில் தாயை வெட்டிக்கொன்ற மகன் துண்டித்த தலையுடன் போலீசில் சரண்
x
தினத்தந்தி 18 March 2018 11:30 PM GMT (Updated: 18 March 2018 6:45 PM GMT)

கறம்பக்குடி அருகே சொத்து தகராறில் தாயை வெட்டிக்கொன்ற மகன், துண்டித்த தலையுடன் போலீசில் சரண் அடைந்தார்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மறவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி ராணி (வயது 50). இவர்களுக்கு ஆனந்தன் (23), வினோத் (21), அர்ச்சுனன் (19), திருநாகேசுவரன் (17) ஆகிய 4 மகன்கள் உள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு தங்கராசுவின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்ததாக ராணி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது 4 மகன்களும், அவர்களது தந்தை வழி தாத்தா கண்ணுசாமி பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்கள்.

தங்கராசு கொலையில் குற்றம் நிரூபிக்கப்படாததால் ராணி விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் ராணி மறவன்பட்டிக்கு வந்து அவரது கடைசி மகன் திருநாகேசுவரனுடன் தனியாக வசித்து வந்தார். மற்ற மூன்று மகன்களும் தாத்தாவுடனேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கராசுவின் பூர்வீக சொத்தை விற்பது தொடர்பாக 3 மகன்களுக்கும், ராணிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

சொத்தை விற்க முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் ராணியின் மூத்த மகன் ஆனந்தன் இருந்து வந்தார். இந்த நிலையில் கூலி வேலைக்கு செல்வதற்காக நேற்று காலை மறவன்பட்டி பஸ் நிறுத்தத்தில் ராணி நின்று கொண்டு இருந்தார். அப்போது ஆத்திரத்தில் இருந்த ஆனந்தன் பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

இதில் ராணியின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே துடித்து, துடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அங்கிருந்த பயணிகள், பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் ஆனந்தன் நிதானமாக துண்டிக்கப்பட்ட தனது தாயின் தலையை மட்டும் ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பின்னர் அவர் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் போய் சரண் அடைந்தார். அப்போது அவர் பையில் எடுத்து வந்த ரத்தம் சொட்ட, சொட்ட துண்டிக்கப்பட்ட தாயின் தலையை எடுத்து போலீசாரிடம் காண்பித்தார். இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். தனது தாயை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் ஆனந்தன் கூறினார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்முத்தலீப் கறம்பக்குடி போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் ஆனந்தனிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக தாயின் தலையை மகனே துண்டித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story