பாலியல் பலாத்கார முயற்சியில் இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை சித்தப்பாவிடம் போலீசார் விசாரணை


பாலியல் பலாத்கார முயற்சியில் இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை சித்தப்பாவிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 May 2018 10:15 PM GMT (Updated: 10 May 2018 6:56 PM GMT)

ஓமலூர் அருகே பாலியல் பலாத்கார முயற்சியில் இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அந்த இளம்பெண்ணின் சித்தப்பாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு கூலித்தொழிலாளி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய மனைவியும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர்களது 17 வயது மகள் மல்லூரில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தார். பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள தந்தை வழி பாட்டி வீட்டுக்கு வந்து அவருடன் தங்கியிருந்தார். இளம்பெண்ணுடன் அவருடைய பாட்டி, சித்தப்பா ஆகியோரும் வசித்து வந்தனர்.

கஞ்சநாயக்கன்பட்டியில் மற்றொரு வீட்டில் அவருடைய தாத்தா குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. நேற்று காலையிலும் திருவிழாவையொட்டி ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பினார்கள். வீட்டில் இருந்த பாட்டி அருகில் உள்ள தாத்தா வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வீட்டுக்குள் அந்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை அறிந்தனர். இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அண்ணாமலை, தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் சம்பத், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

நேற்று காலை வீட்டில் பாட்டி இல்லை. சித்தப்பாவும், அந்த இளம்பெண்ணும் வீட்டில் இருந்துள்ளனர். பின்னர் சித்தப்பா வீட்டின் உள்ளே இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் பார்த்தபோது இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்தநிலையில் அந்த இளம்பெண்ணின் சித்தப்பா தலைமறைவானார். எனவே அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று இருக்கலாம் என்றும், அப்போது இளம்பெண் மறுத்ததால் கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். தர்மபுரியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட் டை சுற்றி சுற்றியே வந்தது. பின்னர் ரோடு வரை வந்து நின்று விட்டது.

இந்த கொலை தொடர்பாக அந்த இளம்பெண்ணின் சித்தப்பாவை போலீசார் தேடி வந்தனர். அவரை பிடிக்க துணை சூப்பிரண்டு அண்ணாமலை மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், சித்தப்பாவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே அந்த ஊரில் ஆண்கள் இல்லாத வீடுகளில் இரவு நேரங்களில் சித்தப்பா புகுந்து பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவரை ஊர்மக்கள் பிடித்து எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story