சத்தியமங்கலத்தில் வக்கீல் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 3 பேர் கைது


சத்தியமங்கலத்தில் வக்கீல் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2018 10:45 PM GMT (Updated: 12 May 2018 8:14 PM GMT)

சத்தியமங்கலத்தில் வக்கீல் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் திருநகர் காலனியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 60). வக்கீல். இவருடைய மகன் அசோக் (வயது 27). இவர் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அருகே உள்ள மளவெள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கோடைவிடுமுறையையொட்டி அசோக் சத்தியமங்கலத்தில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் கல்லூரியில் படிக்கும் தீபக் (24), சவுந்தர் (25), ஆகியோரும் வந்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு திடீரென வீட்டின் முன் பகுதியில் ஏதோ பொருள் வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது.

சத்தம் கேட்டதும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜாமணி, அசோக், தீபக், சவுந்தர் ஆகியோர் திடுக்கிட்டு எழுந்தனர். உடனே அவர்கள் அனைவரும் வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தனர். அப்போது வீட்டின் முன்புற ஜன்னல் மற்றும் ‘போர்டிகோ’ பகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. மேலும் வீட்டின் முன்பு 2 பேர் மோட்டார்சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்களை பிடிக்க அனைவரும் ஓடினர். மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் ‘உங்கள் குடும்பத்தினரை சும்மா விடமாட்டேன்’ என கூறினார். பின்னர் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர்.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் ‘பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதில் தீயை பற்ற வைத்து வீட்டில் தூக்கி வீசியது’ தெரியவந்தது. இந்த சம்பவத்தால் சத்தியமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி புஞ்சைபுளியம்ப்பட்டியை சேர்ந்த டெனீஸ் ஜாக்சன் (24) உள்பட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story