வெள்ளாற்றில் மணல் எடுக்க எதிர்ப்பு: அழியாநிலை பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்


வெள்ளாற்றில் மணல் எடுக்க எதிர்ப்பு: அழியாநிலை பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்
x
தினத்தந்தி 16 May 2018 11:00 PM GMT (Updated: 16 May 2018 7:44 PM GMT)

வெள்ளாற்றில் குவாரி அமைத்து மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அழியாநிலை பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் ஓடும் வெள்ளாறு இப்பகுதியின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஆற்றில் அரசு மணல் குவாரிகள் அமைத்தும், தனியார் மாட்டு வண்டிகள், டிப்பர் லாரிகள் மூலமும் மணலை எடுக்கப்பட்டதால் நீரா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அழியாநிலை, இடையாத்திமங்கலம் உள்ளிட்ட 5 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்தது. இதையடுத்து அழியாநிலை பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் அழியாநிலையில் மணல் குவாரி அமைக்கப்பட்டால், அழியாநிலை பகுதியில் நீராதாரம் மிகவும் பாதிக்கப் படும் எனக்கூறி, அழியாநிலை பகுதி பொதுமக்கள் கடந்த வாரம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்். இந்த நிலையில் அழியாநிலையில் மணல் குவாரி அமைக்கக்கூடாது எனக்கூறியும், மணல் குவாரி அமைப்பதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, அழியாநிலை ஆஞ்சநேயர் கோவில் பின்புறமுள்ள ஆலமரத்தடியில் அழியாநிலை பொதுமக்கள் மற்றும் வெள்ளாறு பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன், த.மா.கா. மாநில இணை செயலாளர் முத்துக்குமாரசாமி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் கராத்தே கண்ணையன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முபாரக்அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் குறித்து ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:- அழியாநிலை பகுதியில் தொடர்்ந்து மணல் குவாரி அமைத்து மணல் எடுத்தனர். மணல் முற்றிலும் எடுக்கப்பட்ட நிலையில் குடிநீர் ஆதாரம் உள்ள பகுதியில் மணல் எடுக்காமல் இருந்தனர். இந்த நிலையில் நீராதாரம் பாதிக்கப்படும் வகையில் தற்போது மணல் குவாரி அமைத்து மணல் எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அழியாநிலை பகுதியில் குவாரி அமைத்து மணல் எடுத்தால், இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, விவசாயமும் பாதிக்கபடும். இதனால் இப்பகுதியே பாலைவனமாக மாறிவிடும். எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அழியாநிலை பகுதியில் வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். அவ்வாறு முடிவை கைவிடாமல் அழியாநிலை பகுதியில் மணல் குவாரி அமைக்க முயற்சித்தால், இப்பகுதி பொதுமக்களுடன் நாங்களும் இணைந்து எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story