ஏரியூரில் சாலை விரிவாக்க பணி: ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றம்


ஏரியூரில் சாலை விரிவாக்க பணி: ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 18 May 2018 11:30 PM GMT (Updated: 18 May 2018 8:07 PM GMT)

ஏரியூரில் சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

ஏரியூர்,

ஏரியூரில் சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதனால் வீட்டு உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து ஏரியூர் வழியாக நாகமரை வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் கட்டமாக பென்னாகரம் முதல் மூங்கில் மடுவு வரையில் சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மூங்கில் மடுவு முதல் ஏரியூர் வரையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் ஏரியூரில் சாலை விரிவாக்க பணி கடந்த வாரம் தொடங்கியது. இதற்காக அப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யக்கோரி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடை கால்வாய்கள் அமைத்த பின்னரே சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, போலீசார் பாதுகாப்புடன் நேற்று நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.

அப்போது சில வீட்டு உரிமையாளர்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே வீடு கட்டியுள்ளதாக கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story