சென்னை விமான நிலையத்தில் பேனாவால் வயிற்றில் குத்தி பயணி ரகளை


சென்னை விமான நிலையத்தில் பேனாவால் வயிற்றில் குத்தி பயணி ரகளை
x
தினத்தந்தி 20 May 2018 11:59 PM GMT (Updated: 20 May 2018 11:59 PM GMT)

மும்பை செல்லும் விமானம் தாமதம் ஆனதால் பேனாவால் தன் வயிற்றில் குத்தி பயணி ரகளையில் ஈடுபட்டார். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல 150 பயணிகள் சோதனைகளை முடித்து காத்திருந்தனர். ஆனால் அந்த விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.

அப்போது சென்னையை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், விமானம் எப்போது புறப்பட்டு செல்லும்? என கேட்டு விமான நிறுவன மையத்தில் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே இருந்தார். திடீரென அவர் பேனாவால் தனது வயிற்றில் குத்திக்கொண்டு ரகளையில் ஈடுபட்டார்.

இதனால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவருக்கு விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்த பயணி குடிபோதையில் இருந்ததால் அவரை விமானத்தில் ஏற்ற விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்து, கீழே இறக்கிவிட்டனர். இதையடுத்து மற்ற பயணிகளுடன் அந்த விமானம் நள்ளிரவு 12 மணிக்கு மும்பை புறப்பட்டது. இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story