நாசரேத் அருகே பயங்கரம் 14 வயது மகனை எரித்துக்கொன்ற ஓட்டல் தொழிலாளி மதுபோதையில் கட்டிலுக்கு தீ வைத்த கொடூரம்


நாசரேத் அருகே பயங்கரம் 14 வயது மகனை எரித்துக்கொன்ற ஓட்டல் தொழிலாளி மதுபோதையில் கட்டிலுக்கு தீ வைத்த கொடூரம்
x
தினத்தந்தி 7 Jun 2018 9:00 PM GMT (Updated: 7 Jun 2018 8:16 PM GMT)

14 வயது மகனை ஓட்டல் தொழிலாளி எரித்துக் கொன்றார். மதுபோதையில் கட்டிலுக்கு தீ வைத்ததால் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

நாசரேத்,

14 வயது மகனை ஓட்டல் தொழிலாளி எரித்துக் கொன்றார். மதுபோதையில் கட்டிலுக்கு தீ வைத்ததால் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

நாசரேத் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

சிறுவன் கருகி சாவு

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே பாட்டக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40), ஓட்டல் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் அவருடைய 14 வயது மகன் ஹரி பிரசாத் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான்.

நள்ளிரவில் மதுபோதையில் கட்டிலுக்கு முத்துக்குமார் தீ வைத்ததாகவும், பின்னர் போதையில் அந்த பகுதியிலேயே தூங்கியதாகவும் கூறப்படுகிறது. கட்டிலில் படுத்து இருந்த முத்துக்குமார் அப்படியே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

வெளியூர் சென்று இருந்த முத்துக்குமாரின் மனைவி சிவகனி நேற்று காலையில் வீட்டுக்கு வந்தார். அங்கு கட்டிலுடன் தனது மகன் எரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதே அறையில் கணவர் மது போதையில் கிடந்ததாகவும் தெரிகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த நாசரேத் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடல் கருகி கிடந்த ஹரி பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நாசரேத் போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில், இறந்த ஹரி பிரசாத் சிறுவயதில் இருந்தே மூளை வளர்ச்சி குறைபாடு உடைய வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி சிறுவன் ஆவான். அதனால் கட்டிலில் படுத்த நிலையிலேயேதான் ஹரி பிரசாத் இறந்துள்ளான்.

நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த முத்துக்குமார் கட்டிலுக்கு தீ வைத்ததாகவும், இதனால் ஹரி பிரசாத் பலியானதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஹரி பிரசாத் இறந்ததை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துக்குமாரின் மனைவி சிவகனி அங்கன்வாடி சமையர் ஆவார். மேலும் சத்யகோமதி (12), மீனாட்சி கீர்த்தனா (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அவர்கள், கச்சனாவிளையில் உள்ள பள்ளிக்கூடத்தில் சத்யகோமதி 7–ம் வகுப்பும், மீனாட்சி கீர்த்தனா 5–ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.


Next Story