நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: தேர்களில் சாரம் அமைக்கும் பணி தொடக்கம்


நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: தேர்களில் சாரம் அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 9 Jun 2018 9:00 PM GMT (Updated: 9 Jun 2018 7:00 PM GMT)

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு தேர்களில் சாரம் அமைக்கும் பணி தொடங்கியது.

நெல்லை, 

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு தேர்களில் சாரம் அமைக்கும் பணி தொடங்கியது.

ஆனித்திருவிழா

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனித்திருவிழா சிறப்பு பெற்றதாகும். இந்த ஆனித்திருவிழா வருகிற 19–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். காலை, இரவு நேரங்களில் சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27–ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

நெல்லையப்பர் கோவிலில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேர் என மொத்தம் 5 தேர்கள் உள்ளன. இந்த தேர்கள் அனைத்தும் கீழ ரதவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. திருவிழாவையொட்டி தேரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கூரைகள் பிரித்து அகற்றப்பட்டு உள்ளன.

சாரம் அமைக்கும் பணி

பின்னர் தேர்களை, தேரோட்டத்துக்கு தயார் படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தேர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நேற்று அம்பாள் தேரை அலங்காரப்படுத்துவதற்கு கம்புகளை கொண்டு தேரில் சாரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் திரளான தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அம்பாள் தேரை தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய தேர்களுக்கு சாரம் கட்டும் பணியும் இறுதியாக சுவாமி தேருக்கு சாரம் கட்டும் பணியும், கும்பம் வைக்கும் பணியும் நடைபெறுகிறது.


Next Story