நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை ஏ.டி.எம். மோசடி கும்பலுக்கு தகவல் தரும் கருப்பு ஆடுகள், போலீசாருக்கு நாராயணசாமி எச்சரிக்கை


நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை ஏ.டி.எம். மோசடி கும்பலுக்கு தகவல் தரும் கருப்பு ஆடுகள், போலீசாருக்கு நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Jun 2018 11:15 PM GMT (Updated: 10 Jun 2018 8:22 PM GMT)

போலீஸ் நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை ஏ.டி.எம். மோசடி கும்பலுக்கு தகவல் தெரிவித்து வரும் காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நாராயணசாமி எச்சரித்தார்.

புதுச்சேரி,

புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு உதவிடும் வகையில் போலீஸ் சார்பில் கம்ப்யூட்டர் காவலாளி சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவையில் சுற்றுலா வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. ஆன்மிக சுற்றுலா, ஓய்வு சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா என்ற 3 வகையான சுற்றுலாவையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பு தருவதாக இருக்கவேண்டும்.

சுற்றுலா பயணிகளின் உயிர், உடமைக்கு பாதுகாப்பு தரவேண்டும். தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள் தொல்லையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். சுற்றுலா பயணிகளிடம் போலீசார் கனிவாக பேசி தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

உயர் அதிகாரிகள் முதல் கடைசிநிலை காவலர் வரை சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். இதனால்தான் புதுவையில் குற்றங்கள் குறைந்துள்ளன. கண்டுபிடிக்க முடியாமல் போன பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் கண்டுபிடித்துள்ளோம்.

நெல்லித்தோப்பு அடகுக்கடை உரிமையாளர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலம் அபகரிப்பு செய்தவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். விஞ்ஞான ரீதியில் கொள்ளையில் ஈடுபட்ட போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் ஈடுபட்டவர்களை நமது போலீசார் கைது செய்துள்ளனர். அதில் மேலும் சிலரை கைது செய்ய வேண்டியுள்ளது.

புதுவை, தமிழகம் மட்டுமல்லாது வெளிநாட்டு கும்பலுக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் யாரும் விமர்சனம் செய்யவேண்டாம். இதில் தொடர்புடையவர்களை முழுமையாக கண்டுபிடிப்பதன் மூலம் புதுவை காவல்துறைக்கு மகுடம் சூட்டப்படும்.

போலீஸ் நடவடிக்கை பற்றிய விவரங்களை இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளுக்கு காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் தகவல்களை கொடுத்து வருகிறது. அவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன்.

அரசின் துறையில் பணிபுரிந்து வருகிறோம் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். காவல்துறையில் பணிபுரிந்து வருபவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story