காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஒருங்கிணைப்பு குழு முதல் கூட்டம் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் 14–ந் தேதி நடக்கிறது


காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஒருங்கிணைப்பு குழு முதல் கூட்டம் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் 14–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 10 Jun 2018 9:30 PM GMT (Updated: 10 Jun 2018 8:55 PM GMT)

காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் வருகிற 14–ந் தேதி நடக்கிறது.

பெங்களூரு, 

மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் வருகிற 14–ந் தேதி நடக்கிறது.

கூட்டணி ஆட்சி

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளன. ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி, முதல்–மந்திரியாகவும், காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அத்துடன் 25 மந்திரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மந்திரிசபையில் இன்னும் 7 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் கூட்டணி ஆட்சியை பிரச்சினை இல்லாமல் நடத்த வசதியாக முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் மந்திரி பதவி கிடைக்காததால் முன்னாள் மந்திரிகள் எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல், சதீஷ் ஜார்கிகோளி உள்பட சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக எம்.பி.பட்டீல் துணை முதல்–மந்திரி பதவி கேட்டு பிடிவாதமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரை காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, எம்.பி.பட்டீலை டெல்லிக்கு அழைத்து சமதானப்படுத்த முயன்றார். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக எம்.பி.பட்டீல் அறிவித்துள்ளார். அதேப் போல் சதீஷ் ஜார்கிகோளி காங்கிரசில் இருந்து விலக இருப்பதாகவும், இதுபற்றிய இறுதி முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே, எம்.பி.பட்டீலுக்கு மந்திரி பதவி வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜனதாதளம்(எஸ்) கட்சியிலும் சில எம்.எல்.ஏ.க்கள், மந்திரி பதவி வழங்க வலியுறுத்தி வருகிறார்கள். அதேவேளையில் அக்கட்சியில் மந்திரி பதவி ஒதுக்கப்பட்டும் சிலர் வேறு துறையை கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதனால் காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி நீடிக்குமா? இல்லை கவிழுமா? என்ற நிலை நிலவுகிறது.

பா.ஜனதா தீவிரம்

இதற்கிடையே கூட்டணி ஆட்சியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை பா.ஜனதா உன்னிப்பாக கவனிப்பதுடன், ஆட்சியை பிடிக்க காய்களை நகர்த்து வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் பா.ஜனதாவும் தீவிரம் காட்டி வருகிறது. இதை உறுதிபடுத்தும் விதமாக, பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, எங்கள் கட்சிக்கு காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்று கூறியுள்ளார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் பெங்களூருவில் வருகிற 14–ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் சித்தராமையா தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது.

இதில் முதல்–மந்திரி குமாரசாமி, துணை முதல்–மந்திரி பரமேஸ்வர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் டேனிஷ்அலி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதில் மந்திரி பதவி கிடைக்காததால் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்தும், இரு கட்சிகளின் தலைவர்களும் தங்களின் கட்சியில் போர்க்கொடி தூக்கி இருப்பவர்களை சமாதானப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.


Next Story