நாமக்கல்லில் ஜமாபந்தி நிறைவு: 153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


நாமக்கல்லில் ஜமாபந்தி நிறைவு: 153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 12 Jun 2018 10:45 PM GMT (Updated: 12 Jun 2018 9:29 PM GMT)

நாமக்கல்லில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வந்தது. இந்த ஜமாபந்திக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இறுதி நாளான நேற்று ஜோடிகை அணியார், சர்வமான்ய அணியார், காதப்பள்ளி உள்ளிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல், உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல், முதியோர்் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 146 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள கிராம புலப்பட நகல் பதிவேடு, கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை வழங்கப்பட்ட நிலங்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பிறப்பு-இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை கலெக்டர் பார்வையிட்டு சரிபார்த்தார்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு தற்காலிக உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 44 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவையும், 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், 20 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளையும் என மொத்தம் 153 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) துரை, நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார்கள் அருள், மதியழகன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story