கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர் தொகுதியில் பா.ஜனதா வெற்றி


கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர் தொகுதியில் பா.ஜனதா வெற்றி
x
தினத்தந்தி 13 Jun 2018 12:10 AM GMT (Updated: 13 Jun 2018 12:10 AM GMT)

மேல்-சபை தேர்தலில் கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர் தொகுதியில் பா.ஜனதாவும், கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சியும் வெற்றி பெற்றது.

பெங்களூரு,

4 தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) கட்சி மூன்றிலும், பா.ஜனதா ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் சங்கரமூர்த்தி, ராமச்சந்திர கவுடா, அமர்நாத் பட்டீல், கணேஷ் கார்னிக், ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, மரிதிப்பேகவுடா ஆகியோரின் பதவி காலம் நிறைவடைகிறது. இதை யடுத்து கர்நாடக தென்கிழக்கு, கர்நாடக தென்மேற்கு, கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதிகள், கர்நாடக தென்மேற்கு, கர்நாடக வடகிழக்கு, பெங்களூரு பட்டதாரி தொகுதிகளில் கடந்த 8-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது.

இதில் பதிவான ஓட்டுகள் அடங்கிய வாக்கு பெட்டிகள் பெங்களூரு ஆர்.சி. கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்தது. ஓட்டு எண்ணிக்கை 12-ந் தேதி(நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை 8 மணிக்கு ஆர்.சி.கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் வாக்கு பெட்டிகளின் சீல் உடைக்கப்பட்டு, வாக்குச்சீட்டுகள் மேஜையில் கொட்டப்பட்டன. அதை கட்சிகள் வாரியாக ஓட்டுகளை பிரித்து கட்டுகளாக கட்டினர். அதன்பிறகு ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது.

இதில் நேற்று இரவு 9 மணி வரையில் ஒரு தொகுதி ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்தது. அதாவது கர்நாடக தென் கிழக்கு ஆசிரியர் தொகுதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா வேட்பாளர் நாராயணசாமி 2,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் மரிதிப்பேகவுடா 360 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மற்ற 4 தொகுதிகளில் 2 ஆசிரியர் தொகுதிகள் மற்றும் ஒரு பட்டதாரி தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், ஒரு பட்டதாரி தொகுதிகளில் பா.ஜனதாவும் முன்னிலை வகித்தன.

காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலையை பெறவில்லை. 6 தொகுதியிலும் முழுமையான இறுதி தேர்தல் முடிவு இன்று(புதன்கிழமை) அதிகாலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி பெற்றுள்ள நாராயணசாமி, கர்நாடக சட்டசபை தேர்தலில் பெங்களூரு ஹெப்பால் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.

அவர் முன்பு ஆசிரியர் தொகுதி எம்.எல்.சி.யாக இருந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஹெப்பால் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நாராயணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த தேர்தலில் காங்கிரசுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் நடைபெற்ற 6 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரசை சேர்ந்தவர் உறுப்பினர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

Next Story