தேன்கனிக்கோட்டையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்


தேன்கனிக்கோட்டையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 13 Jun 2018 10:45 PM GMT (Updated: 13 Jun 2018 9:31 PM GMT)

தேன்கனிக்கோட்டையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி, உதவி வன பாதுகாவலர் நாயுடு, ஓசூர் வருவாய் கோட்ட அலுவலர் விமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் கருப்பண்ணன் வரவேற்றார். விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு நாட்டுப்பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாட்டு பசும்பால் குளிரூட்டு மையம் தொடங்கப்பட்டது. விவசாயிகள் முதலில் 1 லிட்டர் ரூ.20-க்கு விற்பனை செய்து வந்த பசும்பால் ரூ.40 ஆக விலை உயர்த்தப்பட்டது. தேன்கனிக்கோட்டை பகுதியில் 16 கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து நாட்டு பசும்பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த மையத்தில் 16 இளைஞர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று பாலினை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பால் சேகரிக்கும் இளைஞர்களுக்கு ரூ.9 லட்சத்து 78 ஆயிரத்து 889 ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1 கோடியே 10 லட்சத்து 8 ஆயிரத்து 507 பால் வணிகம் செய்து ரூ.9 லட்சத்து 8 ஆயிரத்து 89 லாபம் ஈட்டப்பட்டுள்ளது. அந்த லாபத்திலிருந்து 314 பயனாளிகளுக்கும் ரூ.2 சதவீதம் பகிர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு சுமார் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் லிட்டர் பசும்பால் கொள்முதல் செய்து லாபம் ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், மகளிர் மேம்பாட்டு திட்ட இயக்குனர் உமாமகேஷ்வரி, தனித்துணை கலெக்டர் ( சமூக பாதுகாப்புத்திட்டம்) சந்தியா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, தாசில்தார் மணிமொழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபராஜ் சாமுவேல், தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story