பால்கர் அருகே விபத்து - பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து 2 பேர் பலி


பால்கர் அருகே விபத்து - பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து 2 பேர் பலி
x
தினத்தந்தி 11 July 2018 11:06 PM GMT (Updated: 11 July 2018 11:06 PM GMT)

பால்கர் அருகே தறிகெட்டு ஓடிய கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த 2 பேர் பலியானார்கள்.

வசாய்,

குஜராத் மாநிலம் வாபியில் இருந்து நேற்றுமுன்தினம் நாலச்சோப்ரா நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரில் 5 பேர் இருந்தனர். மாலை 6 மணியளவில் அந்த கார் பால்கர் மாவட்டம் காசா பகுதியில் மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள சரோட்டி பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய அந்த கார், பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு கீழே பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் இருந்த 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்து துடித்தனர்.

விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விசாரணையில், பலியானவர்கள் தானே மாவட்டம் பயந்தரை சேர்ந்த ரோகித் துபே, மும்பை சாந்தாகுருசை சேர்ந்த ஓம்பிரகாஷ் துபே என்பது தெரியவந்தது. காயம் அடைந்தவர்கள் பயந்தரை சேர்ந்த சுனில் பாண்டே, நாலச்சோப்ராவை சேர்ந்த தயாசங்கர் சேத், சந்தீப் உபாத்யாய் என்பது தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story