வீடு தீப்பற்றி எரிந்தது; உடல் கருகி மாற்றுத்திறனாளி பெண் பலி


வீடு தீப்பற்றி எரிந்தது; உடல் கருகி மாற்றுத்திறனாளி பெண் பலி
x
தினத்தந்தி 12 July 2018 11:00 PM GMT (Updated: 12 July 2018 9:35 PM GMT)

ராஜாக்கமங்கலம் அருகே வீடு தீப்பற்றி எரிந்ததில் மாற்றுத்திறனாளி பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

ராஜாக்கமங்கலம்,

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வடக்கு கன்னக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் அன்னபாக்கியம் (வயது 75).

இவர் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் ஓலை குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிறு, சிறு உதவிகள் செய்து வந்தனர். அவரது வீட்டுக்கு மின்சார இணைப்பும் இல்லை. இதனால் மண்எண்ணெய் விளக்கை பயன்படுத்தி வந்தார்.

இந்தநிலையில், நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் அன்னபாக்கியத்தின் வீடு தீப்பிடித்து எரிந்து கிடந்ததை கண்டனர். உள்ளே சென்று பார்த்த போது அன்னபாக்கியம் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் இரவு அன்னபாக்கியம் சமையல் செய்த போது, எதிர்பாராத விதமாக குடிசை வீட்டில் தீப்பற்றி வேகமாக பரவியதாக தெரிகிறது. அவர் மாற்றுத்திறனாளியாக இருந்ததால் விரைவாக தப்பி செல்ல முடியவில்லை. மேலும், அருகில் வேறு வீடுகள் இல்லாததால் உதவிக்கு யாரும் வரமுடியவில்லை. இதனால், அன்னபாக்கியம் தீயில் கருகி பரிதாபமாக இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கருகி கிடந்த உடலை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடு தீப்பிடித்து எரிந்ததில் மாற்றுத்திறனாளி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story