சட்டவிரோத மதுவிற்பனை; 4 பேர் கைது 925 மதுபாட்டில்கள் பறிமுதல்


சட்டவிரோத மதுவிற்பனை; 4 பேர் கைது 925 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 July 2018 10:45 PM GMT (Updated: 12 July 2018 10:24 PM GMT)

குமாரபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 925 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அருகிலும் மற்றும் பல்வேறு கடைகளிலும் வைத்து காலையிலேயே மதுவிற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 925 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குமாரபாளையத்தை சேர்ந்த மணிவேல் (வயது 28), தங்கராஜ் (29), மோகன்ராஜ் (29) மற்றும் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த அண்ணாத்துரை (45) என 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர். 

Next Story