பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை


பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 July 2018 11:30 PM GMT (Updated: 26 July 2018 10:59 PM GMT)

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். பகல் 11 மணி முதல் 11.30 மணி வரை விவசாயிகள் மனுக்கள் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் சி.எம்.துளசிமணி பேசியதாவது:-

கீழ்பவானி பாசன பகுதியில் மஞ்சள், கரும்பு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவு பாசன பகுதிகளில் பருவமழை பெய்யாத காரணத்தால் பாசன நீர் பற்றாக்குறையும், வறட்சியும் ஏற்பட்டு உள்ளது. பயிரிட்ட பயிர்கள் காயவும், காய்ப்பு நின்று போன தென்னை மரங்களில் வந்த பாளைகளில் இருக்கும் குரும்பைகள் உதிரவும் தொடங்கிவிட்டது.

நடப்பு ஆண்டில் பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால் நீலகிரியில் உள்ள நீர்மின் அணைகள் நிரம்பிவிட்டன. 32.8 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் தற்போது தண்ணீர் இருப்பு 25.5 டி.எம்.சி.யாக உள்ளது.

எனவே கீழ்பவானி பாசன பகுதியில் உள்ள இரட்டைப்படை எண் மதகுகள் மூலம் பாசன வசதி பெறும் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கருக்கு 15 நாட்கள் உயிர் தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும். மேலும் ஆகஸ்டு 15-ந்தேதி முதல் அட்டவணைப்படி ஒற்றைப்படை எண் கொண்ட மதகுகளுக்கு நெல் சாகுபடி செய்ய தண்ணீர் திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினார்கள்.

சிறு குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு பேசியதாவது:-

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் அதிகநீரை சேமித்து வைக்கும் வகையில் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். நொய்யல் ஆற்றில் சாய கழிவுநீர் கலக்காமல் இருக்கவும், ஆற்றின் நீரை வேளாண்மை துறை ஆய்வு செய்து எந்த பயிர் சாகுபடி செய்யலாம் என்பதையும் விளக்க வேண்டும். தற்போது ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது.

எனவே இதற்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில் கூறியதாவது:- எழுமாத்தூர் பகுதியில் உள்ள மலைத்தொடரில் போலீஸ்துறை குடியிருப்புகள் கட்டுவதற்காக எந்த ஒரு அறிவிப்பும், இன்றி சுமார் 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் எடுத்து வருகிறார்கள். இதனை தடுக்க வேண்டும்.

தடப்பள்ளி வாய்க்காலில் கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் இன்னும் கடைமடை பகுதிக்கு செல்லவில்லை. கடந்த ஆண்டும் இதேபோல் தண்ணீர் செல்லவில்லை. இதற்கு காரணம் பூட்டே இல்லாத மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேறுவது ஆகும். இதனால் தண்ணீர் வீணாகி பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காலிங்கராயன், தடப்பள்ளி வாய்க்காலில் சுமார் 1,600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்றுவரை ஆவுடையார் பாறை கிராமத்திற்கு செல்லவில்லை. இந்த தண்ணீர் அவசியமற்றது. இந்த வாய்க்கால்கள் அனைத்தும் சீரமைக்கப்படாததால் இன்னும் புதுக்கரை, கவுந்தப்பாடி போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. 15 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட தண்ணீர் பல்வேறு பகுதிகளில் விரயம் ஆகிக்கொண்டிருக்கிறது. மேலும் சுமார் 1,408 போலியான மின் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின் இணைப்பு துண்டிக்கப்படவும் இல்லை. கடந்த 15 நாட்களில் மட்டும் 1,100 தட்கல் மின் இணைப்புகளுக்கு சுமார் ரூ.30 கோடி வைப்புத்தொகை கட்டப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக கோபி, சத்தியமங்கலம், பவானி போன்ற பகுதிகள் அடங்கும். இதனை கண்டறிந்து ஆய்வு குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடம்பூர், இருட்டியபாளையம், பசுவனாபுரம், பவளக்குட்டை ஆகிய பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் பால் எடுத்து வருகிறார்கள். பாலின் தன்மை குறித்து ஒருமுறை மட்டுமே அளவிடுகிறார்கள். பின்னர் அளவீடு செய்வதில்லை. 5-க் கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து நாளொன்றுக்கு 3 ஆயிரம் லிட்டருக்கும் மேல் பால் வருகிறது. ஆகவே அரசு தரப்பில் ஆவின் கூட்டுறவு அமைத்தால் விவசாயிகளுக்கு நல்ல விலையும், அரசுக்கு வருவாயும் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பதில் அளித்தனர். கூட்டத்தில், உதவி கலெக்டர் ஜெ.பத்மஜா மற்றும் அரசு அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டார் கள்.


Next Story