‘மம்தா பானர்ஜியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி


‘மம்தா பானர்ஜியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 7 Aug 2018 9:27 PM GMT (Updated: 7 Aug 2018 9:27 PM GMT)

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்களுக்கு ஆதரவாக பேசி வரும், மம்தா பானர்ஜியை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. பரபரப்பாக பேட்டி அளித்தார்.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.டி.ரவி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக உள்ளாட்சி தேர்தல், அடுத்த ஆண்டு(2019) நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜனதா கட்சியை வலுப்படுத்தும் விதமாக வருகிற 9-ந் தேதி முதல் பா.ஜனதா தலைவர்கள் மாநிலம் முழுவதும் 3 குழுக்களாக பிரிந்து சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர்.

எடியூரப்பா, ஷோபா எம்.பி, கோவிந்த் கார்ஜோள் தலைமையில் ஒரு குழுவும், ஜெகதீஷ் ஷெட்டர், ஆர்.அசோக் தலைமையில் ஒரு குழுவும், ஈசுவரப்பா, நான்(சி.டி.ரவி), லட்சுமண் சவதி தலைமையில் ஒரு குழு என 3 குழுக்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. நாங்கள் கட்சியை பலப்படுத்த தீவிர முயற்சி எடுப்போம்.

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வங்காளதேச நாட்டினரை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஓட்டு வங்கிக்காக அதை தடுக்கிறது. மேலும் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்காளதேசம் உள்பட வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து மம்தா பானர்ஜி பேசி வருகிறார். இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை, வெளியேற்றும் போது மம்தா பானர்ஜியையும் இந்த நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.

கர்நாடகத்தில் கூட்டணி அரசு ஆட்சி அமைத்த பின்னர் எந்த வித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. விவசாயிகளை கடனை முழுமையாக தள்ளுபடி செய்வேன் என்று கூறிய குமாரசாமி, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார். முதலில் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

சிக்கமகளூருவில் கடந்த 2 வருடத்தில் 1,309 பேர் இறந்து உள்ளனர். அவர்களின் ஈமச்சடங்குக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிதி உதவி வழங்கப்படவில்லை. இந்த விஷயத்தில் கூட அரசு அலட்சியமாக செயல்படுகிறது. உடனடியாக ஈமச்சடங்கு செலவுகளை அரசு வழங்க வேண்டும்.

ஹாசனில் உள்ள பால் பண்ணையில் பாலில் திரவகத்தை கலந்து விற்பனை செய்கிறார்கள். இது கண்டிக்கத்தக்க குற்றமாகும். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாமி விவேகானந்தர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக எழுத்தாளர் பகவான் கூறியுள்ளார். அவர் கூறிய கருத்தை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டியது இல்லை. அவர் தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக இப்படி கூறி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story