ஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


ஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2018 10:45 PM GMT (Updated: 9 Aug 2018 7:01 PM GMT)

ஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தவாசல் கிராம காலனி பகுதியில் சுமார் 1,200 பேர் வசிக்கின்றனர். காலனி வடக்கு பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் வழங்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப் பட்டது. அந்த ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

கடந்த 2013-14-ம் ஆண்டு ரூ.46 ஆயிரம் செலவில் கிராமப்புற கட்டிடங்கள் பரா மரிப்பு மற்றும் சீரமைப்பு திட்டத்தில் ஆழ்குழாய் பழுது பார்க்கப்பட்டது. தண்ணீர் ஏற்றப்படாத தொட்டிக்கு செலவு செய்து சீரமைத்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் இன்று வரை தண்ணீர் வரவில்லை. 2018-ம் ஆண்டு கடந்த ஜனவரி மாதம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே மீண்டும் புதிய ஆழ் குழாய் கிணறு அமைக்கப்பட்டது. அதில் அடி பம்பு அமைத்து தண்ணீர் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதிலும் கடந்த 8 மாதங் களாக தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். மேலும் அப்பகுதி மக்கள் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள தெற்கு பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தவாசல் காலனி வடக்கு பகுதிக்கு வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் குடிநீர் வழங்க பல முயற்சிகள் எடுத்தும், பணம் செலவழித்தும் பயன் அளிக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் ஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்யவேண்டும். இல்லை என்றால் மாவட்ட நிர்வாகம் வேறு ஏதாவது சரியான முடிவெடுத்து குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story