நாங்குநேரி அருகே ரெயில் முன் பாய்ந்து காதலன் தற்கொலை


நாங்குநேரி அருகே ரெயில் முன் பாய்ந்து காதலன் தற்கொலை
x
தினத்தந்தி 11 Aug 2018 10:30 PM GMT (Updated: 11 Aug 2018 8:56 PM GMT)

நாங்குநேரி அருகே ரெயில் முன் பாய்ந்து காதலன் தற்கொலை செய்து கொண்டார். காதலியும் விஷம் குடித்து பரிதாபமாக இறந்தார்.

நாங்குநேரி,

நாங்குநேரி அருகே ரெயில் முன் பாய்ந்து காதலன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள பாணான்குளத்தை சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 21) தொழிலாளி. மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகள் சுதா (21). இவர் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். ரத்தினகுமாரும், சுதாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

சுதாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ரத்தினகுமார் சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் நாங்குநேரி அருகே உள்ள செங்குளம் ரெயில் நிலையம் அருகே, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பரிசோதனை முடிந்து நேற்று உறவினர்களிடம் ரத்தினகுமாரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே நேற்று சுதா, தனது காதலன் இறந்த சம்பவம் அறிந்து அவரின் வீட்டிற்கு வந்து கதறி அழுதார். அப்போது ரத்தினகுமாரின் உறவினர்கள் சுதாவுக்கு ஆறுதல் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தனது வீட்டிற்கு சென்ற சுதா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Next Story