திருப்பத்தூர் அருகே வாலிபர் கழுத்தை நெரித்து கொலை


திருப்பத்தூர் அருகே வாலிபர் கழுத்தை நெரித்து கொலை
x
தினத்தந்தி 11 Aug 2018 10:43 PM GMT (Updated: 11 Aug 2018 10:43 PM GMT)

திருப்பத்தூர் அருகே வாலிபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் அவரது உடல் கிடந்ததை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பெரியார்நகரை சேர்ந்தவர் மகேந்திரகுமார். ஆட்டோ டிரைவர். இவரது மகன் ராஜ்குமார் (வயது 31) திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் நிறுத்தும் இடத்தில் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றார்.

அப்போது திருப்பத்தூர் கவுதமபேட்டை பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ராஜ்குமாரை தங்களுடன் அழைத்துச்சென்றனர். வழக்கமாக இவ்வாறு வெளியே சென்றால் இரவு 10 மணிக்குள் ராஜ்குமார் வீடு திரும்பி விடுவார். ஆனால் நள்ளிரவை தாண்டியும் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் திருப்பத்தூரை அடுத்த பெரியகுனிச்சி அருகே கோவிந்தன் என்பவரது வீட்டின் பின்புறம் வாலிபர் ஒருவரின் பிணம் அனாதையாக கிடப்பது குறித்து மகேந்திரகுமாருக்கு தெரியவந்தது. உடனே அவர் பதறி அடித்துக்கொண்டு குடும்பத்தினருடன் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது தனது மகன் ராஜ்குமார் என்பதை அறிந்து கதறினார். இது குறித்து அவர் கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜ்குமாரின் உடலை கைப்பற்றினர்.

பிணமாக கிடந்த ராஜ்குமாரின் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. அவரது மூக்கிலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

ராஜ்குமாரை முன்விரோதம் காரணமாக யாரும் கொலை செய்தார்களா? அல்லது சைக்கிள் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்ததா? அல்லது நண்பர்களுக்குள் நடந்த மோதலில் அவர் கொலை செய்யப்பட்டரா? என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story