கல்லணை கால்வாய் கடைமடை பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம்


கல்லணை கால்வாய் கடைமடை பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2018 10:15 PM GMT (Updated: 17 Aug 2018 7:32 PM GMT)

கல்லணை கால்வாய் கடைமடை பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி பகுதி காவேரி டெல்டா நீர் பாசனத்துறைக்கு உட்பட்ட கல்லணை கால்வாய் கடைமடை பாசன விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நாகுடியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கி பேசினார். கலெக்டர் கணேஷ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது, நாகுடி பகுதியில் கல்லணை கால்வாயில் இருந்து வரும் காவிரி நீரின் மூலம் 168 ஏரிகள் நிரப்பப்பட்டு 27 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். தற்போது கல்லணை கால்வாய் திறக்கப்பட்டபோதும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேருவதில் தடைகள் ஏற்பட்டு உள்ளது. கல்லணை கால்வாய் தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும் நாகுடி பகுதிகளுக்கு உட்பட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேருவதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.

விவசாயிகள் தெரிவித்தப்படி மேற்பனைக்காட்டில் 550 கன அடி நீர் வருவதற்கும், நாகுடி பகுதிக்கு 300 கனஅடி நீர் வருவதற்கும் உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் நாகுடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் செல்ல பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்கள். விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று நாகுடி பகுதிக்கு தொடர்ந்து 300 கனஅடி நீர் வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் விவசாய சங்க பிரதிநிதிகள் தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க உடனடியாக அனுமதி பெற்று தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ரெத்தினசபாபதி, ஆறுமுகம், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story