திருவாரூர்: சிறுவர்களை கடத்த முயன்ற பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்


திருவாரூர்: சிறுவர்களை கடத்த முயன்ற பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்
x
தினத்தந்தி 17 Aug 2018 11:21 PM GMT (Updated: 17 Aug 2018 11:21 PM GMT)

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தாத்தாவை பார்க்க வந்த சிறுவர்களை கடத்த முயன்ற பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள சேமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய மகள் மகாலெட்சுமி(வயது 36) என்பவர் தந்தைக்கு உதவியாக இருந்து அவரை கவனித்து வந்துள்ளார். மருத்துவமனையில் இருந்த மகாலெட்சுமிக்கு, நன்னிலம் வடுகக்குடியை சேர்ந்த பெரியாச்சி என்கிற குமுதா(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் மகாலெட்சுமி தனது மகன்கள் இரண்டாம் வகுப்பு படித்து வரும் ராகுல்(7) மற்றும் 4 வயது மகன் ராஜேஷ் ஆகிய இருவரையும் தனது தந்தையை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு மகாலெட்சுமி அழைத்து வந்துள்ளார்.

மதியம் மகாலெட்சுமி சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது குமுதா அங்கு வந்துள்ளார். பழக்கத்தின் அடிப்படையில் தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ளச் சொல்லி விட்டு மகாலெட்சுமி கழிவறைக்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் ராகுல், ராஜேஷ் ஆகிய இருவரையும் கடத்த திட்டமிட்டு, அங்கிருந்து அவர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனை வாசலுக்கு குமுதா வந்துள்ளார். அப்போது அங்கு எதிரில் வந்த மகாலெட்சுமியின் தாய் கோவிந்தம்மாள், எங்கு குழந்தைகளை அழைத்து செல்கிறாய்? என கேட்டுள்ளார்.

இதனால் பதற்றம் அடைந்த குமுதா, சிறுவர்களை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்தம்மாள், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் குமுதாவை விரட்டி பிடித்து திருவாரூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவர்களை கடத்தி செல்ல குமுதா திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் கடத்தலுக்கு குமுதா மட்டும் காரணமா? அல்லது இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல் நடைபெற்று வரும் நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவர்களை கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story