சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: கரையோர கிராம மக்கள் தவிப்பு


சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: கரையோர கிராம மக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 18 Aug 2018 11:15 PM GMT (Updated: 18 Aug 2018 10:37 PM GMT)

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் கரையோர கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

சிதம்பரம்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது. அந்த நீர் கடைமடை பகுதியான தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கீழணைக்கு வந்தது. அங்கிருந்து வீராணம் ஏரிக்கும், கொள்ளிடம் ஆற்றுக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொடியம்பாளையம் என்ற இடத்தில் வங்க கடலில் கலக்கிறது.

இந்த நிலையில் வெள்ள நீரை வங்க கடல் உள்வாங்கவில்லை. இதன்விளைவாக கடந்த 14-ந் தேதி சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் சென்ற நீர் பழைய கொள்ளிடம் ஆற்றுக்குள் புகுந்து அதன் கரையோரம் இருந்த 7 கிராமங்களை சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் படகு மூலம் சென்று வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் மேலும் அதிகப்படியான நீர் செல்லும் என்பதால் கொள்ளிடம் ஆற்றங்கரையோர பகுதியில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கிடையே நேற்று கீழணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடிநீர் திறக்கப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத் தொடர்ந்து கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர், ஜெயங்கொண்டபட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

இந்த நிலையில் நேற்று கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக கரையோரம் உள்ள பெராம்பட்டு, வேலக்குடி, வல்லதுரை, அகரநல்லூர், பழையநல்லூர், வல்லதுரை, தீர்த்தக்குடி, எருக் கன்காட்டுபடுகை, கருப்பூர், ஒற்றைபாளையம், பூமாங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் உட்புகுந்தது. இதனால் கிராம மக்கள் சாலைகளிலும், மேடான பகுதிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். எருக்கன்காட்டுபடுகை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மழைநீர் உட்புகுந்தது.

இதுதவிர சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி, ஜெயங்கொண்டப்பட்டினம் ஆகிய 3 ஊர்களை வெள்ளம் சூழ்ந்து, அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. அந்த பகுதி தீவுபோல காட்சி அளிக்கிறது. இதன்விளைவாக மேற்கண்ட கிராமங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் அனைத்து கிராம மக்களும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பால் அந்த கிராமங்களுக்கு படகு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை தாசில்தார் அமுதா தலைமையில் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர். போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டியன் மேற்பார்வையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல் காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் ஓமாம்புலியூர், சி.அரசூர், குருவாடி, நந்திமங்கலம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களை சேர்ந்த 330 பேரை பாதுகாப்பான இடங்களில் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் சிவகாமசுந்தரி தங்க வைத்துள்ளார். குருவாடி, வெள்ளூர், காஞ்சிவாய், மேலபருத்திக்குடி, கீழப்பருத்திக்குடி ஆகிய பகுதிகளில் பாசன வாய்க்கால்கள், அதன் ஷட்டர்கள் சீரமைக்காததால் ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தில்லைநாயகபுரம் கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் ஓடுவதால், அங்கு அமைக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜன் வாய்க்காலில் தண்ணீர் வருகிறது.



Next Story